லட்சக்கணக்கான முஸ்லீம்கள் பங்கேற்கும் மாநாடு திருச்சியில் தொடங்கியது!
திருச்சி: திருச்சி அருகே லட்சக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்ற பிரமாண்ட மாநாடு தொடங்கியது. இலங்கை, சவுதி , மலேசியா, சிங்கப்பூர்
உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் இதில் பங்கேற்றனர்.
திருச்சி அருகே லட்சக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்ற பிரமாண்ட மாநாடு சனிக்கிழமை தொடங்கியது. இந்த மாநாடு திங்கள்கிழமை வரை நடைபெறுகிறது. இலங்கை, சவுதி அரபேபியா, மலேசிய, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான முஸ்லிம்கள் வந்து குவிந்தனர்.
முஸ்லிம்கள் மாநாட்டை (இஜ்திமா) இந்த ஆண்டு திருச்சி அருகே இனாம்குளத்தூரில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம் பிரமுகர்கள் தலைமையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பே தொடங்கின.
இதற்காக திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆலம்பட்டிபுதூரில் இருந்து இனாம்குளத்தூர் வரை லட்சக்கணக்கானோர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. வாகனங்கள் நிறுத்துவதற்கும் பல ஏக்கர் பரப்பளவில் ஏற்பாடு செய்யப்பட்டது. குடிநீர் வசதி, குளியல் அறை, உணவு, கழிவறை, தங்குவதற்கான இடம், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. மாநாட்டு திடல் மற்றும் மக்கள் வந்து செல்லும் பகுதி முழுவதும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. இவை பார்ப்பதற்கு இரவை பகலாக்கும் வகையில் உள்ளது.
மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உத்தரபிரதேசம், தெலுங்கானா, டெல்லி, பீகார் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இலங்கை, சவுதி அரபேபியா, மலேசிய, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான முஸ்லிம்கள் வந்து குவிந்தனர்.
இதைத்தொடர்ந்து சனிக்கிழமை காலை பஜ்ரு தொழுகைக்கு பிறகு சிறப்பு துஆவுடன் இஜ்திமா மாநாடு தொடங்கியது. அதைத்தொடர்ந்து மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகள் நடைபெற்றன.
இந்த மாநாடு இன்றும் (ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்றது. நாளையும் தொடர்ந்து நடக்கிறது. மாநாட்டில், இறைவன் கட்டளையை நிறைவேற்றி இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் (ஸல்) வாழ்க்கை முறையை பின்பற்றி அனைவரும் வாழ வேண்டும், மறுமை வாழ்வை நினைத்து அதற்கு தகுந்தாற்போல் எப்படி வாழ வேண்டும், சகோதரத்துவம், மனிதநேயம், மனிதாபிமானம், நல்லொழுக்கம், ஒற்றுமை, பிறருக்கு உதவும் மனப்பான்மை, அனாதைகளை ஆதரித்தல், ஏழை-எளியோருக்கு உதவுதல், மகளிருக்குரிய உரிமை மற்றும் சலுகைகளை இஸ்லாமியம் அருளியபடி முறையாக கொடுத்து அவர்களை கவுரவப்படுத்துவது, குழந்தை வளர்ப்பு முறை பற்றி போதித்தல், வணிகத்தில் நேர்மை, கொடுக்கல்-வாங்கலில் நேர்மை, மது இல்லா வாழ்வு, உயரிய பண்பாட்டோடு வாழ்வது, இழிவு பேசுவதை தவிர்த்து வாழ்வது குறித்து தினமும் சொற்பொழிவு நடைபெற்றது.
வளர்ந்து வரும் நாகரிக உலகில் பிரமாண்டமான முறையில் திருமணங்கள் நடைபெற்று வரும் நிலையில், அதற்கு மாறாக நபிவழி சுன்னத் என்பதன் அடிப்படையில் எளிமையான முறையில் ஞாயிற்றுக்கிழமை மாநாட்டு திடலில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு எவ்வித ஆடம்பரமும் இன்றி எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.
மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வசதியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வட மற்றும் தென் மாநிலங்களில் இருந்து வரும் ரெயில்கள் இனாம்குளத்தூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்வதால் ரெயில் மூலமும் அதிக அளவில் முஸ்லிம்கள் வந்தவண்ணம் உள்ளனர். மாநாட்டையொட்டி திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.வரதராஜூ தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.