”ஆசிரியர் மனசுத் திட்டம்” தனி அலுவலகம் திறந்த அன்பில் மகேஷ்.. அதிகாரிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு!
திருச்சி: ஆசிரியர்களின் குறைகளை கேட்டு அறிவதற்காக ஆசிரியர் மனசுத் திட்டம் என்ற புதிய திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்துள்ளார். தற்போது இந்த திட்டத்திற்கு என தனியாக திருச்சியில் அலுவலகம் அமைத்து, ஆசிரியர்களின் கோரிக்கைகளை அறிந்து வருகிறார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆசிரியர்களின் குறைகளை கேட்டறிவதற்காக புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார். அவரது 'ஆசிரியர்களுடன் அன்பில்' என்னும் நிகழ்வின் மூலம் தமிழ்நாடு முழுவதும் நேரடியாக ஆசிரியர்களைச் சந்தித்து உரையாடி வருகிறார்.
ஆசிரியர்கள் மகிழ்ச்சியான மனநிலையில் முழுச் சுதந்திரத்தோடு பணியில் ஈடுபட்டால் மட்டுமே, மாணவர்கள் கற்றல் பணி சிறக்கும் என்பதால் கடந்த மாதம் கோவையில் 'ஆசிரியர்களுடன் அன்பில்' நிகழ்வில் ஆசிரியர்களின் குறைகளைக் கேட்டறியும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

ஆசிரியர் மனசுத் திட்டம்
'ஆசிரியர் மனசுத் திட்டம்' என்ற அந்த திட்டத்தின் கீழ் அமைச்சரது இல்லத்திலும், அலுவலகத்திலும் ஆசிரியர் மனசுப் பெட்டி வைக்கப்பட்டு, அமைச்சரைச் சந்திப்பதற்காக வரும் ஆசிரியர்கள் காத்திருக்காமல் அந்தப் பெட்டியில் தங்களுடைய குறைகளையும், கோரிக்கைகளையும் மனுவாக எழுதி போடுகின்றனர்.

மின்னஞ்சல் அறிமுகம்
அதுமட்டுமில்லாமல் ஆசிரியர்கள் தேடிவந்துதான் கோரிக்கைகளைச் சொல்ல வேண்டும் என்றில்லாமல் மின்னஞ்சல் வழியாகவும் சொல்லலாம் என தனியாக மின்னஞ்சல் முகவரிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதற்காக [email protected], [email protected] என்ற அந்த இரு மின்னஞ்சல் முகவரிகள் மூலமாக ஆசிரியர்களது கோரிக்கைகளைப் பெற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அலுவலகம் திறப்பு
இந்த நிலையில் ஆசிரியர் மனசுத் திட்டத்திற்காக தனி அலுவலகம் ஒன்றை திருச்சியில் செயல்படும் ஆசிரியர் இல்லத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார். தொடர்ந்து அங்கிருந்த ஆசிரியர் மனசுப் பெட்டியில் உள்ள கோரிக்கை மனுக்களையும், ஆசிரியர் மனசுப் பிரிவிற்கு வந்துள்ள மின்னஞ்சல்களையும் அவர் பார்வையிட்டார்.

கோரிக்கைகளை கேட்டறிந்த அன்பில்
பின்னர் ஆசிரியர் மனசுத் திட்ட ஒருங்கிணைப்பாளர் சதிஷ்குமாரிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று, அதில் ஐந்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களிடம் தொலைபேசி வாயிலாக நேரடியாக பேசி அவர்களது கோரிக்கைகளை அமைச்சர் கேட்டறிந்தார். மேலும், அவற்றைத் தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்குப் பரிந்துரைத்தார்.

அதிகாரிகளுக்கு உத்தரவு
ஆசிரியர் மனசு அலுவலகத்திற்கு வரும் மின்னஞ்சல்களை உடனடியாகப் பரிசீலித்து, தனது கவனத்திற்கு கொண்டு வர அலுவலகப் பணியாளர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். மாணவர்களை மட்டும் கணக்கில் கொள்ளாமல் ஆசிரியர்களின் நலனுக்காக அமைச்சர் அன்பில் மகேஷ் செயல்படுத்தி வரும் இந்த திட்டம், ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications