விடுதலைக்கு பிறகும் தொடரும் பிரிவு.. முகாமில் வைக்கப்பட்ட முருகன்! திருச்சியில் கணவரை சந்தித்த நளினி
திருச்சி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 32 ஆண்டுகளுக்கு பின் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்ட நிலையில், தனது கணவர் முருகனை நளினி நேரில் சந்தித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டது உலகையே உலுக்கியது.
இந்த கொலையில் தொடர்புடையதாக பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூக்கு தண்டனை
வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் கைதான 7 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கியது. இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் 7 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் தமிழக ஆளுநர் அதை கிடப்பில் போட்டார்.

பேரறிவாளன் விடுதலை
இந்த நிலையில் கடந்த மே மாதம் பேரறிவாளன் விடுதலை கோரிய வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு அவரை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142-வது பிரிவைச் செயல்படுத்தி, விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு அதிகாரத்தில் விடுதலை
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தங்களை விடுதலை செய்திடுமாறு நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சிறையில் இருந்து நளினி உள்ளிட்ட 6 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

திருச்சி இலங்கை தமிழர் முகாம்
இதில் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட நளினியும், ரவிச்சந்திரனும் விடுவிக்கப்பட்ட நிலையில், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் திருச்சியில் உள்ள முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த நிலையில் திருச்சி சிறப்பு முகாமிற்கு இன்று சென்ற நளினி தனது கணவர் முருகனை சந்தித்து பேசினார்.

நளினி கோரிக்கை
சிறையிலிருந்து வந்த பின் நளினி பேட்டியளித்தபோது, "32 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டும் எனக்கு நிம்மதி இல்லை. என்னுடைய கணவர் 20 வயதில் சிறைக்கு சென்றார். 32 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் அவர் வெளியே வருகிறார். அவரை இலங்கைக்கு அனுப்பாமல் லண்டனில் உள்ள தனது மகளிடம் அனுப்ப வேண்டும். இலங்கையில் அவருக்கு யாருமே இல்லை." என்று கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications