விறுவிறுப்படையும் ராமஜெயம் கொலை வழக்கு..5 ரவுடிகளுக்கு உடல் தகுதி பரிசோதனை.. உண்மை வெளிவருமா?
திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கில் 12 ரவுடிகள் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் அவர்களுக்கு உடல் தகுதி பரிசோதனை நடைபெறுகிறது. நேற்றைய தினம் 7 பேருக்கு உடல் தகுதி பரிசோதனை நடைபெற்ற நிலையில் இன்றைய தினம் 5 பேருக்கு முழு உடல் தகுதி பரிசோதனை நடைபெறுகிறது.
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை பயிற்சிக்குச் செல்லும்போது கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். பத்து ஆண்டுகளைக் கடந்தும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கொலைக் குற்றவாளிகள் யாரென்று அடையாளம் காணப்பட முடியவில்லை.
சிபிஐ, சிபிசிஐடி என பல்வேறு பிரிவினரின் விசாரணைகளைத் தொடர்ந்து தற்போது நீதிமன்ற உத்தரவுப்படி சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுக் குழுவினர் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உண்மை கண்டறியும் சோதனை
ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேகத்திற்கிடமான 13 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி அளிக்கும்படி, திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-6ல் மனுத்தாக்கல் செய்தனர். நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் ஆஜரான, 13 ரவுடிகளில் தென்கோவன் என்ற சண்முகம் மட்டும் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக்கொள்ளவில்லை.

12 பேர் சம்மதம்
மற்ற 12 பேரும் சோதனையின் போது வழக்கறிஞர்கள், டாக்டர்கள் உடனிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளின் அடிப்படையில் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக் கொண்டனர். அதையடுத்து, 12 பேரும் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து, தங்களது மருத்துவ தகுதிச் சான்றிதழுடன் வரும் 21ம் தேதி ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.

உடல் தகுதி பரிசோதனை
ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்த ரவுடிகளுக்கு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் நேற்று உடல் தகுதி பரிசோதனை நடைபெற்றது. சாமிரவி, திலீப், சிவா, ராஜ்குமார், சத்தியராஜ், சுரேந்தர் ஆகிய, 6 ரவுடிகள் இன்று காலை மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வந்தனர். இவர்களிடம், ரத்தம், சிறுநீர் பெறப்பட்டது. தொடர்ந்து, இசிஜி, ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

விறுவிறுப்படையும் ராமஜெயம் கொலை வழக்கு
கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் குமாருக்கு, கடலூர் அரசு மருத்துவமனையில் முழு உடல் தகுதி பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களை தொடர்ந்து, நாளை மோகன்ராம், நரைமுடி கணேசன், கலைவாணன், தினேஷ்குமார், மாரிமுத்து ஆகிய ஐந்து பேருக்கும், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை நடைபெறுகிறது.

உண்மை கண்டறியும் சோதனை எப்போது
முழு உடல் மருத்துவப் பரிசோதனைகள் முடிவுற்ற பிறகு, இதன் சான்றிதழ்கள் அனைத்தும் வரும், 21ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இதன் அடிப்படையில், 12 நபர்களிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கான அனுமதி மற்றும், நடத்துவதற்கான தினத்தையும் இடத்தையும் நீதிபதி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications