கஜா புயல் நிவாரணம்.. தொடர்ந்து குவியும் பொருட்கள்.. திருச்சி கலெக்டர் ரூ.10,000 வழங்கினார்!
திருச்சி: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட திருச்சி மாநகராட்சி அலுவலகம் அருகே நிவாரணப் பொருள்கள் சேகரிப்பு மையத்தை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி ரூ. 10 ஆயிரம் வழங்கி தொடக்கி வைத்தார்.
திருச்சியைச் சேர்ந்த நண்பர்கள் வி.ஏ.கலைவேந்தன், எம்.பிரின்ஸ், மருத்துவர் பெனடிக்ட் ஆகிய 3 பேரும் தன்னார்வலர்கள் 22 பேரும் சேர்ந்து மாநகராட்சி அலுவலகம் அருகில் நிவாரணப் பொருள்கள் சேகரிப்பு மையத்தை அமைத்துள்ளனர். இதனை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி திறந்து வைத்து தனது சொந்த நிதியிலிருந்து ரூ.10 ஆயிரத்தை மைய நிர்வாகிகளிடம் வழங்கினார்.
இது குறித்து நிவாரணப் பொருள்கள் சேகரிப்பு மைய நிர்வாகிகளில் ஒருவரான வி.ஏ.கலைவேந்தன் கூறியது: இங்கு சேகரிக்கப்படும் பொருள்கள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் விரைவில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று வழங்கவுள்ளோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய விரும்புவோர் 98948 55551 என்ற செல்லிடபேசியில் தொடர்பு கொண்டால் நேரில் வந்து பொருள்களை வாங்கி வந்து மையத்தில் சேர்த்து விடுவோம் என்றார்.
கஜா புயல் பாதிப்பு.. மாவட்ட வாரியாக அறிக்கை தேவை.. ஹைகோர்ட் கிளை அதிரடி
கலெக்டர் வேண்டுகோள்
இதனிடையே, மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி வெளியிட்டுள் செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சுனாமி பேரலையால் ஏற்பட்ட சேதத்தின் போதும், தானே புயல் வந்தபோதும், அண்மையில் கேரளாவில் பெய்த பலத்த மழையின் போதும் பொதுமக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நம்மால் இயன்ற பொருள் உதவிகளை வாரி வாரி வழங்கி உள்ளோம்.
மக்களே உதவுங்கள்
திருச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், சமூக அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வங்கிகள், பொதுத்துறை தனியார் நிறுவனங்கள் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்கு தாமாக முன்வர வேண்டும். பொதுமக்கள் தங்களால் முடிந்த உணவு பொருட்கள், உடைகள், மெழுகுவர்த்தி, தார்ப்பாய், போர்வைகள், மளிகை பொருட்கள் போன்றவற்றையும் வழங்கலாம்.
கலெக்டர் அலுவலகத்தில்
புயல் நிவாரண நிதியாக வழங்க முன்வருபவர்கள் கலெக்டரின் பெயரில் வங்கி வரைவோலையாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் பேரிடர் மேலாண்மை தாசில்தார் அலுவலரிடம் அளிக்கலாம். உதவி செய்ய முன்வருபவர்கள் திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதல் தளத்தில் இயங்கிவரும் பேரிடர் மேலாண்மை தாசில்தார் ஜவகரிடம் பொருட்களை ஒப்படைக்கலாம். மேலும் விவரங்களை 89036 00075 என்ற செல்போன் எண்ணிலும், கட்டணமில்லா தொலைபேசி எண் 1077-ஐயும் தொடர்பு கொண்டு பெறலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
வாழை நாசம்
இந்தநிலையில், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 8 ஆயிரம் ஹெக்டேரில் வாழை நாசமடைந்திருப்பதை மதிப்பிட்டுள்ளதாக தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநர் எஸ். உமா தெரிவித்தார். இதுதொடர்பாக, தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநர் எஸ். உமா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:
பொங்கலுக்காக பயிரிட்ட வாழை
8 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்பட்ட வாழைகள் அழிவை சந்தித்துள்ளன. குறிப்பாக, பொங்கல் பண்டிக்கைகாக பயிரியிடப்பட்டிருந்த வாழைகளில் ரூ.500 கோடி மதிப்பிலான வாழைகள் சேதமடைந்துள்ளன. சேத விவரங்களை மட்டும் கணக்கிடாமல், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முடிந்த அளவில் உதவிகளை வழங்க தேசிய வாழை ஆராய்ச்சி மையம் 24 மணிநேரமும் தயார்நிலையில் உள்ளது என்றார்.