திருச்சி வந்த காவிரி..விதை நெல் தூவிய விவசாயிகள்..கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.
திருச்சி: டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர். காவிரி மற்றும் வெண்ணாற்றில் தலா 500 கன அடியும், கல்லணை கால்வாய், கொள்ளிடத்தில் 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்துகுறுவை சாகுபடிக்காக காவிரி நீரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இன்று திறந்துவிடப்பட்ட நீர் திருச்சி மாவட்டம் முக்கொம்புவிற்கு வந்தடைந்தது.
காவிரி நீரை வரவேற்கும் விதமாக திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மலர்கள் தூவியும், நெல் விதைகள் தூவியும் அதனை வரவேற்றனர்.

மே மாதம் தண்ணீர் திறக்கப்பட்டிருப்பது விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. இதன் காரணமாக டெல்டா பகுதிகளில் அதிக அளவில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்றனர்.
இந்த நீர் இன்று மாலை கல்லணைக்கு வந்தடைந்தது. இதனையடுத்து கல்லணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர். காவிரி மற்றும் வெண்ணாற்றில் தலா 500 கன அடியும், கல்லணை கால்வாய், கொள்ளிடத்தில் 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கல்லணையிலிருந்து திறக்கப்படும் நீர் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்,புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்கலுக்கு பாசனத்திற்காக செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்லணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications