"நான் ரவுடி.. இல்லாம ஆக்கிருவேன்" மிரட்டல் விடுத்த பாஜக திருச்சி சூர்யா? கமிஷனரிடம் பெண் பரபர புகார்
திருச்சி : ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை பாஜகவின் ஓபிசி அணியின் மாநில செயலாளர் சூர்யா சிவா அபகரிக்க முயற்சிப்பதாக திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
திமுக எம்.பி திருச்சி சிவாவின் மகனான சூர்யா சிவா, தற்போது பாஜகவில் ஓபிசி அணியின் மாநில செயலாளராக இருக்கிறார். இந்நிலையில், சூர்யா சிவாவும், அவரது மனைவியும், பெண் ஒருவரிடம் இருந்து 1 கோடி மதிப்பிலான சொத்தை அபகரிக்க முயல்வதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
தான் பாஜகவில் பெரிய பொறுப்பில் இருப்பதாகவும், என்னை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் சூரியா சிவா மிரட்டல் விடுப்பதாகவும் அப்பெண் புகார் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கூடம்
திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி புதூர் பகுதியில் வசித்து வருபவர் ஆர்த்தி. இவருக்கு சொந்தமாக திருச்சி சண்முகா நகர் பகுதியில் ஏபிசி மாண்டிசோரி பள்ளி மற்றும் வீடு உள்ளது. இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு தனது உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதால் அவரது நண்பரின் உறவினரான அத்தினா சூர்யா என்பவரிடம் மூன்று வருட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாடகைக்கு விட்டுள்ளார். அத்தினா சூரியா, பாஜக ஓபிசி அணியின் மாநில செயலாளராக இருக்கும் சூரியா சிவாவின் மனைவி ஆவார்.

ஒப்பந்தம் முடிவடைந்தது
2021ஆம் ஆண்டு மே மாதத்துடன் பள்ளி நடத்துவதற்கான உரிமம் முடிவடைந்ததோடு அவர்களோடு போட்டிருந்த வாடகை ஒப்பந்தமும் முடிவடைந்துள்ளது. இதையடுத்து ஆர்த்தி, அத்தினா சூர்யாவிடம், ஒப்பந்தம் முடிந்த நிலையில் பள்ளி கட்டிடத்தையும் வீட்டையும் காலி செய்து தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர் பள்ளிக்கூடத்தையும், வீட்டையும் காலி செய்ய மறுப்பு தெரிவித்து ஆறு மாத வாடகையும் தராமல் இருந்து வந்துள்ளார்.

காலி செய்ய முடியாது
அத்தினா சூர்யாவிடம் இதுபற்றி கேட்டதற்கு கணவர் சூர்யா சிவாவிடம் பேசிக்கொள்ளுமாறு தெரிவித்து விட்டாராம். உரிமம் இல்லாமல் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடத்தி வரும் சூர்யா சிவா, ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் பள்ளி கட்டிடத்தையும் வீட்டையும் காலி செய்ய முடியாது என்று திட்டவட்டமாக கூறியதோடு அவர்களுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

போலீசில் புகார்
இதையடுத்து, சூர்யா சிவாவும், அவரது மனைவியும், தனது ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தனது சொத்தை அபகரிக்க நினைப்பதோடு அவற்றை தங்கள் பெயருக்கு ஐந்து வருட கால அவகாசத்தில் எழுதி தர வேண்டும் என்று தொடர்ந்து மிரட்டி வருவதால் தன்னுடைய உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் எனக் கூறி ஆர்த்தி இன்று திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

பெரிய ரவுடி
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்த்தி, "பள்ளியின் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், பள்ளிக்கூடம் நடத்துவதற்கான உரிமமும் முடிவடைந்துவிட்டதால் காலி செய்து தந்துவிடுங்கள் எனக் கேட்டோம். அப்போது சூரியா சிவா ஆவேசமாக, "சாதாரணமா பேசிக்கிட்டு இருக்கேன்னு நினைச்சியா.. நான் பெரிய ரவுடி. பாஜகவில் பெரிய பொறுப்புல இருக்கேன். உன்னை ஒண்ணும் இல்லாம ஆக்கிருவேன் என மிரட்டினார்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications