மொத்தம் 7 பேர்.. ஒரே நேரத்தில் மண்ணெண்ணெய்யை எடுத்து.. அலறிய கலெக்டர் ஆபீஸ்.. மிரட்டும் கந்துவட்டி
கந்துவட்டி கொடுமையால் ஒரு குடும்பமே தற்கொலைக்கு முயன்றுள்ளது
தூத்துக்குடி: மொத்தம் 7 பேரும் ஒரே நேரத்தில் மண்ணெண்ணெய் எடுத்து தபதபவென உடம்பில் ஊற்றி கொண்டதை பார்த்ததும் தூத்துக்குடி கலெக்டர் ஆபீஸே அலறிவிட்டது... எல்லாத்துக்கும் காரணம் இந்த கந்துவட்டி கொடுமைதான்!
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சூளைவாய்க்கால் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்... இவர் மனைவி வேளாங்கண்ணி.
கணேசன் அதே பகுதியை சேர்ந்த ஜோசப் என்பவரிடம் வீட்டு பத்திரத்தை அடமானமாக வைத்து ரூ.3 லட்சம் கடன் வாங்கியிருக்கிறார்.. இந்த கடனை வாங்கி 4 வருஷம் ஆகிறதாம்.. இதுவரை வாங்கிய கடனுக்கு வட்டியுடன் சேர்த்து சுமார் ரூ.7 லட்சம் கொடுத்துள்ளாராம்.
சாத்தான்குளம் சம்பவம்.. வெயிட்டிங் லிஸ்ட்டில் வைக்கப்பட்ட அருண் பாலகிருஷ்ணனுக்கு புதுப் பதவி!
கந்துவட்டி
ஆனால் அதற்கு பிறகும் ஜோசப், கணேசனின் வீட்டு பத்திரத்தை தரவில்லை.. மேலும் வட்டியை கொடு என்று தொடர்ந்து மிரட்டியும் வந்திருக்கிறார்.. இதனால் மனம் உடைந்த கணேசன், ஏரல் ஸ்டேஷனில் இந்த கந்து வட்டி பற்றி புகார் தந்தார்... ஆனால், இந்த புகார் தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
கோபம்
இதனால் கோபமும், ஆத்திரமும் அடைந்த கணேசன், மனைவி வேளாங்கண்ணி, குழந்தைகளை அழைத்து கொண்டு, நேராக தூத்துக்குடி கலெக்டர் ஆபீசுக்கு வந்தார்.. வந்திருந்த மொத்தம் 7 பேரும் திடீரென கையில் கொண்டு வந்த மண்ணெண்ணெயை எடுத்து தங்களது உடலில் மளமளவென ஊற்றி கொண்டனர்.. பிறகு தீயையும் வைத்து கொளுத்தி கொள்ள போனார்கள்.
7 பேர்
இதை பார்த்ததும் அங்கிருந்த பாதுகாப்புக்கு நின்ற போலீஸார் உட்பட பொதுமக்கள் அனைவருமே அலறிவிட்டனர். ஓடிவந்து அவர்களை தடுத்து காப்பாற்றினர். இதில் கொடுமை என்னவென்றால், கணேசன், 2 கைக்குழந்தைகளையும் தூக்கி கொண்டு வந்திருந்ததுதான்.. பிறகு 7 பேரையும் மீட்ட போலீஸார் சிப்காட் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கந்துவட்டி
இப்படித்தான் 3 வருடத்துக்கு முன்பு இசக்கிமுத்து என்பவர் தன் மனைவி, 2 பெண் குழந்தைகளுடன் நெல்லை கலெக்டர் ஆபீசில் தற்கொலை செய்து கொண்டார்.. இந்த சம்பவம் தமிழகத்தை நிலைகுலைய வைத்தது.. இதற்கு பிறகும் நிறைய தீக்குளிப்பு சம்பவங்கள் கலெக்டர் அலுவலகத்தில் நடக்க ஆரம்பத்தது.
தற்கொலை முயற்சி
இதையடுத்து, யார் மனு தந்தாலும் அதன் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும், யாரும் இனி தற்கொலைக்கு முயல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டாலும், பாதுகாப்பு பலப்படுத்ததப்பட்டாலும் தொடர்ந்து தற்கொலை முயற்சிகள் நடந்து வருகின்றன.. அத்துடன் கந்துவட்டி பிரச்சனையையும் பெரிய அளவில் தடுத்து நிறுத்த முடியாமலேயே உள்ளது!