தீர்ப்பு எந்த நேரத்திலும் வரலாம்.. அதுவும் நியாத்தின் பக்கம்தான்.. கடம்பூர் ராஜூ நம்பிக்கை!
தூத்துக்குடி: அதிமுக பொதுச்செயலாளர் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எந்த நேரத்திலும் வரலாம் என்றும் அதுவும் நியாத்தின் பக்கம்தான் வரும் என்றும் தூத்துக்குடியில் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். மேலும் ஆளுநர் மற்றும் தமிழக அரசின் முரண்பட்ட கருத்துக்கள் களையப்பட்டால் நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் நல்லது எனவும் தெரிவித்துள்ளார்.
தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சந்தீப்பு நகரில் திருநங்கை சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார்.
விழாவில் அவர் திருநங்கைகளுடன் சமத்துவ பொங்கல் வைத்து 50க்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு பொங்கல் பரிசு பொருளை வழங்கினார். தொடர்ந்து கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு அதிமுக ஆதரவு.. கடிதம் அனுப்பிய எடப்பாடி பழனிச்சாமி
முன்கூட்டியே ஆளுநரிடம் கூறியிருந்தால்
ஆளுநர் உரை என்பது அந்த ஆண்டு தொடக்கத்தில் மக்களுக்காக செய்யும் திட்டங்களை மக்களுக்கு வெளிப்படுத்தும் திட்டம் தான். முக்கியமான கூட்டம். ஆளுநருக்கு முதல்வருக்கும் இடையே அறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா, காலத்திலிருந்து மாறுபட்ட கருத்துக்கள் எல்லாம் இருந்து வந்திருக்கிறது. அந்த நிலையில் என்ன செய்ய வேண்டும் என்றால் ஆளுநர் உரை வரும்போது அதற்கு முன்கூட்டியே அரசு ஆளுநரிடம் கூறியிருந்தால் அது பொருத்தமாக இருக்கும்.
முழு பொறுப்பு அரசு தான்
அதை முழு பொறுப்பு அரசு தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். எதிர்க்கட்சி என்றால் நாங்கள் அதற்கு பிந்திய விவாதங்களுக்கு தான் நாங்கள் அறிக்கைகளாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கருத்துக்களை தெரியப்படுத்த முடியும். ஆனால் முந்தைய நிகழ்வு என்பது அது ஆளுங்கட்சிக்கு தான் முழு பொறுப்பு.
நாட்டுக்கு நல்லது
ஆளுநர் கருத்தில் முரண்பட்ட கருத்து தெரிந்திருந்தால் அது முன்பாகவே அதை தெரிந்திருந்து அதை அவரிடம் கொண்டு சேர்த்தால் அது தவிர்க்கப்பட்டிருக்கும் என்பது எங்கள் கருத்து. ஆளுநரும், மற்றும் தமிழக அரசின் கருத்துகள் முரண்பாடுகள் களையப்பட்டால் அது நாட்டுக்கு நல்லது தமிழகத்துக்கும் நன்மை பிறக்கும். அதிமுக தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், இன்னும் தாமதமாவதற்கு வாய்ப்பில்லை விவாதங்கள் முடிந்து தீர்ப்புகள் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது..
எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும்
தீர்ப்பு எந்த நேரத்திலும் வரலாம்.. அந்த தீர்ப்பு நியாயத்தின் பக்கம் இங்கு அதிகமான எண்ணிக்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுகவின் அனைத்து பிரதிநிதிகளும் எங்கே இருக்கின்றார்களோ.. அதற்கு ஏதுவாக எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றோம். இவ்வாறு கடம்பூர் ராஜூ கூறினார்.