"பாஜக தலைமையில்.." வைத்தியலிங்கம் சொன்ன அந்த வார்த்தையை நோட் பண்ணீங்களா! கடுகடுத்த கடம்பூர் ராஜூ
தூத்துக்குடி: கோவை செல்வராஜ் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், அதிமுகவின் கடம்பூர் ராஜூ அவரை கடுமையாக சாடி பேசினார்.
சொத்துவரி, மின்கட்டணம் மற்றும் பால் விலையை திமுக அரசு உயர்த்தியதற்கு எதிராகவும் விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும் அதிமுக சார்பில் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பேரூராட்சிகளிலும் டிச. 9, நகராட்சி மாநகராட்சிப் பகுதிகளில் டிச. 13, ஒன்றியங்களில் டிச.14ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இப்பவே போனாதான் சரி! நேரம் பார்த்து காலை வாரிய கோவை செல்வராஜ்! மொத்தமாய் பறக்கும் ஓபிஎஸ் டீம்!
கடம்பூர் ராஜூ
இதற்கிடையே போராட்டங்களை நடத்துவது தொடர்பாக கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் கோவில்பட்டி எம்எல்ஏவுமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார். இதில் திமுக அரசைக் கண்டித்து வரும் 9,13,14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டம் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.
திமுக வாக்குறுதிகள்
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர் ராஜூ, "தேர்தலில் அளித்த வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றாத அரசாகவே திமுக அரசு உள்ளது. நீட் தேர்வு, கல்விக்கடன் ரத்து, குடும்பத் தலைவி மாதம் 1000 தொகை, பழைய ஓய்வு ஊதிய திட்டம் என எதையும் இந்த திமுக அரசு நிறைவேற்றவில்லை.. இதனால் தமிழக மக்கள் திமுக அரசின் மீது கடுங்கோபத்தில் உள்ளனர். மக்களின் உணர்வுகளை ஆதரித்து, அதைப் பிரதிபலிக்கும் வகையில் பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் அதிமுக சார்பில் போராட்டம் மற்றும் நடைபெற உள்ளது.
கோவை செல்வராஜ்
அது குறித்துத் தான் இப்போது ஆலோசனை நடத்தினோம். வரும் 9,13,14 ஆகிய தேதிகளில் பகுதிகளில் போராட்டம் நடைபெற உள்ளது" என்றார். தொடர்ந்து பாஜக தமிழகத்தில் காலூன்ற எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த கடம்பூர் ராஜூ, "கூட்டணிக் கட்சி ஏற்பவும் காலத்திற்கு ஏற்ப கம்யூனிஸ்ட் கட்சி பேசி வருகிறது.. கம்யூனிஸ்ட் நடத்த வேண்டிய போராட்டத்தை எல்லாம் நாங்கள் நடத்தி வருகிறோம். கோவை செல்வராஜ் காலாவதியான அரசியல்வாதி.. இடையிலே வந்தவர் இடையிலே போய்விட்டார்.
பாஜக தலைமையிலா
டிடிவி தினகரன் அமமுக வளர்ச்சி மட்டும் பார்க்கட்டும்.. அதிமுக வளர்ச்சியைப் பற்றி கவலைப் பட வேண்டியது இல்லை.. மத்திய அரசு கொள்கை ரீதியாக 10 % சதவீத இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்துள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக தலைமையில் தான் தேர்தல் கூட்டணி இருந்து வருகிறது. ஆனால் பாஜக தலைமையில் கூட்டணியைச் சந்திப்போம் வைத்தியலிங்கம் கூறியுள்ளார். இதில் இருந்தே அவர் தெரிகிறது. அவர்கள் உண்மையான அதிமுகவே இல்லை..
உண்மையான அதிமுக இல்லை
உண்மையான அதிமுகவாக இருந்தால் அதிமுக தலைமையில் கூட்டணி என்று சொல்லி இருப்பார்கள். ஆனால், இதில் இருந்தே அவர் உண்மையான அதிமுக இல்லை என்று தெரிகிறது.. கோவில்பட்டி, விளாத்திகுளம் கயத்தார் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக காலத்தில் குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதே பணியை திமுக புதிய பெயர் வைத்து நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது" என்றார்.