சசிகலாவை எதிர்க்கும் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளின் முன்பு போராட்டம்...அதிமுகவினரின் அடடே தீர்மானம்
சசிகலாவிற்கு எதிராக பேசி வரும் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளின் முன்பு போராட்டம் நடத்துவது என அதிமுகவனர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே விளாத்திகுளத்தில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் சசிகலாவிற்கு எதிராக பேசி வரும் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி இல்லங்கள் முன்பு போராட்டம் நடத்துவது என்பது உள்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அரசியலை விட்டு ஒதுங்கிய சசிகலா தற்போது அதிமுகவினருடன் பேசி வருகிறார். அந்த ஆடியோக்கள் தினசரியும் ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. சசிகலா உடன் பேசும் அனைவரையும் கட்சியை விட்டு நீக்கி வருகின்றனர். அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் சசிகலா மீண்டும் பேசி வருகிறார்.
அதிமுகவை கைப்பற்ற நினைக்கும் சசிகலாவை வரவேற்று அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். இந்த நிலையில் கோவில்பட்டி அருகே விளாத்திகுளத்தில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் சசிகலாவிற்கு ஆதரவாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சசிகலா ஆதரவு
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அதிமுகவின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ரூபம்.கே.வேலவன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா மீண்டும் வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கண்டிப்பு
அதிமுக தொண்டர்களை சசிகலா சந்திக்க இருப்பது வரவேற்கக் கூடியது, சசிகலாவுடன் பேசியவர்களை நீக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக தலைமைக்கு சசிகலா புதிய தலைவலியை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது அவருக்கு ஆதரவாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
Recommended Video

முன்னாள் அமைச்சர்கள் வீடுகள்
சசிகலா உடன் பேசுபவர்களை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று அதிமுகவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் சசிகலாவிற்கு எதிராக பேசி வரும் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி இல்லங்கள் முன்பு போராட்டம் நடத்துவது என்பது உள்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கட்சித்தலைமையின் நிலை என்ன
சசிகலா அதிமுகவிலேயே இல்லை அவர் கட்சி உறுப்பினரே இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய தலைவர்கள் கூறி வருகின்றனர். சசிகலாவிற்கு எதிராகவும் பேட்டி அளித்து வருகின்றனர். ஓ.பன்னீர் செல்வம் மட்டும் இதுவரை சசிகலா பற்றி வாய் திறக்காமல் மவுனம் சாதித்து வருகிறார். இந்த நிலையில் சசிகலாவிற்கு எதிராக பேசுபவர்கள் வீடுகளின் முன்பு போராட்டம் நடத்தப்போவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications