எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியது யாரு.. நாங்கதான்.. பொசுக்குனு போட்டு உடைத்த நயினார் நாகேந்திரன்!
தூத்துக்குடி : எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்கியதே பாஜக தான், தொடர்ந்து அவருக்கு நட்பாக இருந்து எல்லா வகையிலும் ஆதரவு கொடுத்தது பாஜக தான் என பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி தொடரும் என பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பாழடைந்த மருத்துவமனை கட்டிடம்.. மும்பை போலீசுக்கு வந்த போன்! உள்ளே 4 பிணங்கள் -யார் எந்த மர்ம ஆண்?
ஒவ்வொரு காலகட்டத்திலும் தலைவர்களின் மறைவுக்குப்பின் உள்ள இடைவெளியில் அதிமுகவில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படுவது வழக்கம்தான், அதன்பிறகு சரியாகிவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன்
பாஜக மாநில துணைத் தலைவரும், பாஜக சட்டமன்றக் கட்சி தலைவருமான நயினார் நாகேந்திரன், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் பாஜகவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ஒரு காலத்தில் பாஜக போராட்டம் நடத்தினால் வெளியே தெரியாமல் இருந்தது. ஆனால் தற்போது பாஜக போராட்டம் என்று அறிவித்தாலே தங்கள் பிரச்சனை தீர்ந்துவிடும் என எண்ணும் அளவிற்கு மக்கள் அதனை வெற்றியாக கருதுகின்றனர். பாஜக போராட்டங்களில் பொதுமக்கள் அதிகமானோர் தாமாக முன்வந்து கலந்து கொள்கின்றனர் எனத் தெரிவித்தார்.
அக்னிபாத்
மேலும் பேசிய அவர், திமுகவின் ஆட்சி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கட்டுமான பொருட்களின் விலை அதிக அளவு உயர்ந்துள்ளது, அக்னிபாத் திட்டம் ஒரு அருமையான திட்டம். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வீட்டில் ஒருவருக்கு கட்டாய ராணுவ பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் அது போன்று கட்டாயப்படுத்துவதில்லை. இளைஞர்கள் விருப்பப்பட்டால் அக்னிபாத் திட்டத்தில் சேரலாம் என்ற நிலையே இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஒற்றைத் தலைமை
மேலும் அதிமுக ஒற்றைத் தலைமை குறித்த கேள்விக்குப் பதிலளித்த நயினார் நாகேந்திரன், "ஒவ்வொரு காலகட்டத்திலும் அதிமுகவில் பிளவுகள் ஏற்படுவது வழக்கம்தான். 1989ல் அ.தி.மு.க இரண்டாக இருந்தது. அதன்பிறகு ஒன்றானது. 1996லும் ஒரு சின்ன பிளவு ஏற்பட்டது. தலைவர்களின் மறைவுக்குப்பின் உள்ள இடைவெளியில் அதிமுக கட்சியில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படுவது வழக்கம்தான். அதன்பிறகு சரியாகிவிடும். அதிமுகவில் தற்போது எழுந்துள்ள ஒற்றைத் தலைமை பிரச்சனை அதன் உட்கட்சி விவகாரம்.
முதலமைச்சர் ஆக்கியது பாஜக
கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. ஒற்றை தலைமை பிரச்சனையை யார் ஆரம்பித்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். இந்த பிரச்சனை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே உள்ள தனிப்பட்ட பிரச்சனை. கடந்த அதிமுக ஆட்சியின்போது எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்கியதே பாஜக தான். தொடர்ந்து அவருக்கு நட்பாக இருந்து எல்லா வகையிலும் ஆதரவு கொடுத்தது பாஜக தான். 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி தொடரும்." எனத் தெரிவித்துள்ளார்.