அண்ணன்னா இப்படி இருக்கணும்.. கண் கலங்க வைத்த ‘பாசமலர்’ கதை- தங்கை நினைவாக வீட்டையே ‘மாற்றிய’ அண்ணன்!
தூத்துக்குடி : தங்கையின் நினைவாக தனது வீட்டையே மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச சிகிச்சை வசதியுடன் கூடிய சிறப்பு பள்ளியாக மாற்றிய மாற்றுத்திறனாளி அண்ணனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே தசைநார் சிதைவு குறைபட்டால் மரணமடைந்த தங்கையின் நினைவாக தனது சொந்த வீட்டை மாற்றுத்திறனாளிக்களுக்கு இலவச சிகிச்சை வசதியுடன் கூடிய சிறப்பு பள்ளியாக மாற்றி அசத்தியுள்ளார் மாற்றுத்திறனாளி அண்ணன்.
இந்த சிறப்புப் பள்ளியை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

மாற்றுத்திறனாளி
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழ விளாத்திகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளியான தனேஷ் கனகராஜ். தசைநார் சிதைவு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்த இவரது மாற்றுத்திறனாளி தங்கை கவிதா கடந்த ஜனவரி 14ஆம் தேதியன்று உயிரிழந்தார். இதனையடுத்து அவரது நினைவாக மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ஏதாவது செய்யவேண்டும் என எண்ணிய தனேஷ் கனகராஜ் போதிய தசைநார் சிதைவு சிகிச்சையும், விழிப்புணர்வும் இன்றி எவரும் உயிரிழக்கக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு தனது சொந்த கிராமத்தில் தனது வீட்டையே சிறப்பு பள்ளியாக மாற்றி அமைத்துள்ளார்.

சிறப்புப் பள்ளி
மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச சிகிச்சை மையத்துடன் கூடிய சிறப்பு பள்ளி ஒன்றினை உருவாக்கியுள்ளார் தனேஷ். இதன் திறப்பு விழா கடந்த 9ஆம் தேதி கீழ விளாத்திகுளம் கிராமத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் இந்த சிறப்புப் பள்ளியை திறந்து வைத்தனர். இதுவே விளாத்திகுளம் பகுதியின் முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.

இலவச சிகிச்சையுடன் கூடிய கல்வி
இந்தச் சிறப்பு பள்ளியில் ஆட்டிசம், பெருமூளை வாதம், அறிவுசார் குறைபாடு, கற்றல் மற்றும் பல்வேறு குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக சிகிச்சையுடன் கூடிய கல்வி வழங்கப்படுகிறது. மேலும் இப்பள்ளியின் சார்பில் இலவச வாகன வசதியும் மாணவர்களின் நலன் கருதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனது தங்கையின் நினைவாக துவங்கப்படும் இந்த முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளியை துவங்கிய தனேஷ் கனகராஜுக்கு மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோரிடமிருந்து பாராட்டுகள் குவிகின்றன.

உலகத்தரம் வாய்ந்த
தான் துவங்கிய சிறப்பு பள்ளியைப் பற்றி மாற்றுத்திறனாளி தனேஷ் கனகராஜ் கூறுகையில், தனது தங்கையின் இறப்பிற்கு பின்னர் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதன் அடிப்படையில் இந்த பள்ளியை தொடங்கியுள்ளதாகவும், இப்பகுதியில் 260க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள் இருப்பதாக தெரியவந்ததாகவும், இங்கு அவர்களுக்கு பல்வேறு தெரபி, சிகிச்சைகள் மற்றும் அடிப்படைக்கல்வி போன்றவை அளிப்பதற்காக அனுபவமும் திறமையும் வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள் உள்ளதாகவும், குறிப்பாக, விளாத்திகுளம் பகுதியில் உலகத்தரம் வாய்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிகிச்சை வசதியுடன் கூடிய கல்வி நிறுவனம் உருவாக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications