சசிகலா புஷ்பா வீட்டில் தாக்குதல்.. போலீசில் சிக்கிய திமுக கவுன்சிலர்.. என்ன நடந்தது?
தூத்துக்குடி: பாஜக துணைத் தலைவர் சசிகலா புஷ்பா வீட்டின் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில், திமுக கவுன்சிலர்கள் உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் திமுக கவுன்சிலர் ராமகிருஷ்ணனை பிடித்து விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறையினர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக திமுக - பாஜக தலைவர்களிடையே வார்த்தைப் போர் அதிகரித்துள்ளது. குறிப்பாக ரஃபேல் வாட்ச் விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை, அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அண்ணாமலை, முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை முன் வைத்து வருகிறார். அதேபோல் பாஜகவினரும் திமுகவினரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அப்போ 5000 கேட்டீங்களே.. இப்போ 1000 தானா? திமுக அரசின் பொங்கல் ’பொய்’ தொகுப்பு! அண்ணாமலை காட்டம்!
சசிகலா புஷ்பா மிரட்டல்
இதனிடையே தூத்துக்குடியில் மூன்று நாட்களுக்கு முன் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பாஜக துணைத் தலைவர் சசிகலா புஷ்பா பேசுகையில், நீங்கள் வீட்டில் இருந்து வெளியே வரும் போது கால் இருக்காது, அண்ணாமலையை பற்றி பேச நாக்கு இருக்காது என்று பேசினார். அதுமட்டுமல்லாமல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 24 மணி நேரமும் உழைக்கிறார். மக்களுக்காக உழைக்கும் அவரை பற்றி பேச திமுகவினருக்கு தகுதி இல்லை என்று ஆவேசமாக பேசினார்.
தாக்குதல்
அமைச்சர் கீதா ஜீவனுக்கு நேரடியாக மிரட்டல் விடுத்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்குள் சசிகலா புஷ்பாவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தூத்துக்குடி பிஎன்டி காலனியில் உள்ள சசிகலா புஷ்பா வீட்டில் முன்பு இருந்த கார் கண்ணாடி, வீட்டின் கண்ணாடி, ஜன்னல் கண்ணாடிகள், சேர் மற்றும் பூந்தொட்டிகளை உடைத்து மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். இதுகுறித்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
சசிகலா புஷ்பா மீது புகார்
இதனிடையே சசிகலா புஷ்பா, அமைச்சர் கீதா ஜீவனை மிரட்டும் வகையில் பேசியதாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி செயலாளர் சீனிவாசன் புகார் அளித்தார். அதன்பேரில் சசிகலா புஷ்பா மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திமுக கவுன்சிலர்கள்
தூத்துக்குடி மாவட்ட பாஜக பிரச்சார பிரிவு செயலாளர் ரத்தினராஜ் என்ற கனி அளித்த புகாரின்பேரில் சிப்காட் போலீஸார் விசாரணை நடத்தி, தூத்துக்குடி மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் ராமகிருஷ்ணன், இசக்கிராஜா மற்றும் கவுன்சிலர் ஒருவரின் கணவர் ரவீந்திரன் உள்ளிட்ட 13 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதேபோல் திமுக கவுன்சிலர் ராமகிருஷ்ணனை பிடித்து விசாரணை நடத்தி வருவதாகவும், மற்றவர்களைத் தேடி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.