இரவு முதல் நசநசத்த மழை.. தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
தூத்துக்குடி: வளிமண்டல மேல் அடுக்கு காற்று சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடியில் மழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு முதல் தூத்துக்குடியில் தொடர் மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்?..தமிழகத்தில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யுமா?
வளிமண்டல மேல் அடுக்கு சுழற்றி
தமிழக கடலோர பகுதியில் வளிமண்டல மேல் அடுக்கு காற்று சுழற்சி உருவாகி உள்ள காரணத்தினால் சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், புதுச்சேரி, திண்டிவனம், வந்தவாசி, காஞ்சிபுரம், திருக்கோவிலூர், ஆரணி, அரக்கோணம், வேலூர், கன்னியாகுமரி, ராதாபுரம், நாகர்கோவில், திசையன்விளை, வள்ளியூர், நாங்குநேரி, பத்தமடை, அம்பாசமுத்திரம், தென்காசி, கடையநல்லூர் மற்றும் புளியங்குடி ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
விடுமுறை
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றிரவு முதல் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருப்பதால் இன்று (அக்.27) மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார். வரும் 29ம் தேதி முதல் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. இதற்கு முன்னதாக தற்போது லேசான மழை பெய்து வருகிறது
சென்னை
சென்னையை பொறுத்த அளவில், நேற்றிரவு வானம் மேகமூட்டத்துடன் இருந்த நிலையில் இன்று அதிகாலை முதல் லேசான தூறல் தொடங்கியது. பின்னர் அண்ணாநகர், கோயம்பேடு, வில்லிவாக்கம், அடையாறு, கே.கே.நகர், நுங்கம்பாக்கம் என பல்வேறு பகுதிகளில் பரவலான மழை பெய்துள்ளது. முன்னதாக தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு இயல்பைவிட 45% அதிகமான மழைபொழிவை பெற்றிருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 23ஆம் தேதியுடன் இந்தியாவில் இருந்து தென்மேற்கு பருவமழை விலகியுள்ளது.
உள் மாவட்டங்கள்
இதனையடுத்து வரும் 29ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கிறது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல திண்டுக்கல், திருப்பூர், தென்காசி என உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.