ரத்தம்! அலறல் சத்தம்! இன்ஸ்பெக்டர் மிரட்டல்! சாத்தான்குளம் வழக்கில் ஏட்டு பரபரப்பு சாட்சியம்
தூத்துக்குடி: சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ் பென்னிக்சின் உடல் உடையில் இரத்தம் இருந்ததாகவும், அலறல் சத்தம் கேட்டதாகவும் தலைமைக் காவலர் பரபரப்பு வாக்குமூலம் ஒன்றை அளித்திருக்கிறார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி கொரோனா ஊரடங்கின்போது சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்ஸ் இருவரையும் போலீசார் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
விசாரணை என்ற பெயரில் இருவரையும் போலீசார் தாக்கியதில் இருவரும் உயிரிழந்த தகவல் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு.. நீதிபதி முன்பு சாட்சியம் அளித்த பென்னிக்ஸ் தாயார்
சிபிஐ குற்றப்பத்திரிகை
தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர, உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன் மற்றும் ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
தலைமைக் காவலர் பரபரப்பு சாட்சியம்
2 ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணை நடந்து வரும் நிலையில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி பத்மநாபன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் முக்கிய சாட்சியான ஸ்ரீதரின் ஓட்டுநரும் தலைமைக் காவலருமான ஜெயசேகர், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நடந்ததை விளக்கினார்.
காவல் நிலையத்தில் கதறல் சத்தம்
அதில், ஆய்வாளர் ஸ்ரீதர் பணியில் இருக்கும்போது தன்னை பகைத்துக் கொண்ட எவனும் வெளியே போகக்கூடாது என்றும் அவர்களை அடிக்க வேண்டும் என்றும் கூறியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். போலீஸ் வாகனத்தின் அருகே தான் நின்றுகொண்டு இருந்தபோது காவல் நிலையத்தில் உள்ளே இருந்து கதறல் சத்தம் தனக்கு கேட்டதாகவும் அவர் கூறினார்.
உடலிலும் உடையிலும் இரத்தம்
போலீசார் கைது செய்து காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரது உடலிலும், ஆடைகளிலும் இரத்தம் இருந்ததாகவும் அவர் கூறி இருக்கிறார். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமின் மனுவையும் தள்ளுபடி செய்து ஆணையிட்டார்.