மக்களை பாதிக்க கூடாது..மின் கட்டண உயர்வை திரும்ப பெறுக.. தமிழக அரசுக்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை!
தூத்துக்குடி: தமிழகத்தில் ஏழை, எளிய மக்களை பாதிக்காத வகையில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நாடாளுமன்றத்தில் ஆளும் பாஜக அரசு ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறது. மக்கள் பிரச்சனைகளை பேசியதற்காக 27 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் அதில் குறிப்பாக நாலு பேர் கூட்டத்தொடர் முழுவதும் நீக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் எதிர்க்கட்சிகளை புலனாய்வு மற்றும் அமலாக்கத்துறை உள்ளிட்டவை மூலம் பாஜக அல்லாத மாநிலங்களை ஆட்சி புரியும் தலைவர்களை பாஜக அரசு அச்சுறுத்தி வருவதாக குற்றம்சாட்டினார்.

கனியாமூர் கலவரம்
இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக கனியாமூர் சம்பவத்தில் மாணவி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என உடற்கூறு ஆய்வுகள் தெரிவிக்கும் வகையில் உள்ளது. ஆனால் அந்தச் சம்பவங்கள் மறைக்கப்பட்டு மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது. பள்ளி மீது தாக்குதல் நடத்தியவர்களை கலவரத்தை உண்டாக்கியவர்கள் என்று திசை திருப்பும் செயல் நடைபெற்று வருகிறது.

கண்காணிப்பு தேவை
மேலும் உளவுத்துறை சார்பாக அடித்தட்டு சமூதாயத்தைச் சேர்ந்த இளைஞர்களால் வன்முறை ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்று கூறியிருப்பது விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தும். உளவுத்துறை மற்றும் காவல் துறை விழிப்பாக செயல்பட்டிருந்தால் கலவர சம்பவங்கள் நடந்திருக்காது. எனவே மாணவி இறப்புக்கு நீதி வேண்டும். அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவிகள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பு குறித்து தனி கண்காணிப்பு கொண்டு வர வேண்டும் அதற்கு தமிழக அரசும் முதல்வரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

செஸ் ஒலிம்பியாட்
தொடர்ந்து சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரதமர் நரேந்திர மோடியை அமர வைத்து தமிழர்களின் பாரம்பரியம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாடம் எடுத்திருக்கிறார். என்எல்சி நிர்வாகத்தில் பொறியாளர் தேர்வில் தமிழர் ஒருவர் கூட இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

மின் கட்டணம்
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது குறித்து மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்து சொல்லி இருக்கிறார். அந்த கருத்தை நியாயப்படுத்த முடியாது. சாதாரண ஏழை எளிய மக்களை பாதிக்காத வகையில் மின்கட்டணம் இருக்க வேண்டும். மின்கட்டணம் உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications