திருச்செந்தூர் : கொடியேற்றத்துடன் தொடங்கியது ஆவணி திருவிழா - 26ம் தேதி தேரோட்டம்!
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் ஆவணித் திருவிழா, இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தமிழ் கடவுளான முருகக் கடவுளின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஆவணித் திருவிழாவும் ஒன்று. இந்த திருவிழா, கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் கலந்து கொள்ளாமல் கோவிலில் மிக எளிமையாக நடைபெற்றது. இந்த ஆண்டு ஆவணி திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டனர்.
திரளான பக்தர்கள் கலந்து கொள்ள ஆவணி திருவிழா, இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைனையொட்டி அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டதுடன், முதலில் விஸ்வரூப தரிசனமும், பின்னர், உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றன. பின்னர், 4 மணிக்கு கொடி ஊர்வலகமாக கொண்டு செல்லப்பட்டு, அதிகாலை 5.30 மணிக்கு கோயில் பிரகாரத்தில் உள்ள கொடி மரத்தில், கொடி ஏற்றப்பட்டது. பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெற்றன. கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று மாலை, அப்பா் சுவாமிகள் திருக்கோயிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் புறப்பட்டு திருவீதிகளில் உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சியும், இரவில் ஸ்ரீபெலி நாயகா் அஸ்திரத்தேவருடன் தந்தப் பல்லக்கில் 9 சந்திகளில் திருவீதியுலா வரும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.
12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், வரும் 21ம் தேதி இரவு 7.30 மணிக்கு சிவன்கோயிலில் குடவருவாயில் தீபாராதனை நடைபெறுகிறது. 23ம் தேதி 7ம் திருவிழா அன்று, காலை 5.30 மணிக்குள் சுவாமி சண்முகர் உருகு சட்டசேவையும், 8.45 மணிக்கு சண்முகவிலாசத்தில் இருந்து சுவாமி வெற்றிவேர் சப்பரத்திலும், மாலை 4.30 மணிக்கு சிவப்பு சாத்தி வீதியுலா வருகிறது. 8ம் திருவிழாவான 24ம் தேதி காலை 5 மணிக்கு சுவாமி வெள்ளி சப்பரத்திலும், காலை 11 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை சாத்தியில் எழுந்தருளுகிறார்.
முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம், வரும் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. திருவிழா நாட்களில் தினமும் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் வலம் வருகின்றனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் ஆவணி திருவிழா நாளை கொடியேற்றம்..26ல் தேரோட்டம்