மகளுக்கு நிச்சயதார்த்த ஏற்பாடு.. மணல் மாஃபியாக்களால் நிலை குலைந்த விஏஓ குடும்பம்.. உருக்கமான தகவல்
தூத்துக்குடி: மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்ட விஏஓ லூர்து பிரான்சிஸ் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், உயிரிழந்த விஏஓ லூர்து பிரான்சிஸ் குறித்து உருக்கமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே சூசைபாண்டியாபுரம் என்ற இடத்தை சேர்ந்தவர் லூர்தி பிரான்சிஸ். 55-வயதான இவர் நெல்லையை அடுத்த முறப்பநாடு அருகே உள்ள கோவில் பத்து என்ற இடத்தில் வி.ஏ.ஓவாக பணியாற்றி வந்தார்.
சூசைபாண்டியாபுரத்தில் இருந்து பைக்கில் தினமும் அலுவலகத்துக்கு சென்று வந்தார். நேற்று முன் தினம் இவர் வழக்கம் போல் தனது அலுவலகத்தில் பணிய் செய்து கொண்டு இருந்தார். அப்போது விஏஓ அலுவலகத்திற்கு வந்த இரண்டு பேர், வி.ஏ.ஓ லூர்து பிரான்சிசை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

இதில் பலத்த காயம் அடைந்த வி.ஏ.ஓ ரத்த வெள்ளத்தில் வெளியே ஓடிவந்து விழுந்தார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். போலீசர் நிகழ்விடத்திற்கு சென்று லூர்து பிரான்சிஸை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார்.
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டதும் இது தொடர்பாக லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பணியில் இருந்த வி.ஏ.ஓ வெட்டிக் கொலை செய்யப்பட்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்தக் கொலை தொடர்பாக நேற்று முன்தினம் கலியாவூரை சேர்ந்த ராமசுப்பிரமணியன் (40), மாரிமுத்து (32) ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே, உயிரிழந்த வி.ஏ.ஓ லூர்து பிரானிஸ் குறித்து உருக்கமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அது குறித்த விவரம் வருமாறு:- நேர்மையான அதிகாரியாக இருந்த லூர்து பிரான்சிஸ் கடந்த ஒன்றைரை ஆண்டுகளுக்கு முன்பாக முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
சூசைபாண்டியாபுரத்தைச் சேர்ந்த, லூர்து பிரான்சிஸ் - டோன் சிட்ட என்ற மனைவியும் 2 மகன்கள், ஒரு மகள் என 3 பிள்ளைகள் உள்ளனர். தனது பிள்ளைகளை லூர்து பிரான்சிஸ் நன்றாக படிக்க வைத்துள்ளார். மூத்த மகன் ராகேஷ் ஆல்வின் ரயில்வேயில் பணியாற்றி வருகிறார். இரண்டாவது மகன் மார்ஷல் யேசுவடியான் சட்டப்படிப்பு முடித்துவிட்டு, மதுரை ஐகோர்ட்டில் பணியாற்றி வருகிறார். நீதிபதி பணிக்காகவும் முயற்சி செய்து கொண்டு வருகிறார்.
லூர்து பிரான்சிஸின் மகள் அருள் விசி ராகேல் ஆசிரியர் பயிற்சி முடித்து இருக்கிறார். தனது மகளுக்கு லூர்து பிரான்சிஸ் திருமண வரன் பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், மகளுக்கு அடுத்த வாரம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்துள்ளது. இந்த நிலையில், தான் லூர்து பிரான்சிஸ் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். லூர்து பிரான்சிஸ் படுகொலை செய்யப்பட்டது இந்த குடும்பத்தையே நிலைகுலைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications