கடனால் மூழ்கிய குடும்பம்.. ராணிப்பேட்டையில் 3 பேர் தற்கொலை
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே கடன் தொல்லை காரணமாகக் கல்லூரி பேராசிரியர் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் சுப்பன்னமுதலி தெருவை சேர்ந்த ராமலிங்கம், சோளிங்கரில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி அனுராதா. இவர்களுக்கு விஷ்ணு, பரத் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் விஷ்ணு பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
விஷ்ணு மனைவியுடன் பெங்களூரூவில் வசித்து வரும் நிலையில், இளைய மகன் பரத் கோவையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்தார். தற்போது கொரோனா காரணமாக அவர் வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

மூன்று பேர் தற்கொலை
இந்த நிலையில், நேற்று மாலை பெங்களூரிலிருக்கும் விஷ்ணு, தன் தந்தைக்குப் போன் செய்திருக்கிறார். நீண்ட நேரமாக அழைத்தும், தந்தை போனை எடுக்காததால், அதே பகுதியில் வசிக்கும் தன் சித்தப்பா சிவகுமாருக்கு போன் செய்து வீட்டுக்குச் சென்று பார்க்க சொல்லியிருக்கிறார். சிவகுமார் சென்று பார்த்தபோது, கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தன் அண்ணன் ராமலிங்கம், அண்ணி அனுராதா, அண்ணனின் இளைய மகன் பரத் ஆகிய மூவரும் தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டு இருந்தனர்.

கடன் தொல்லையால் தற்கொலை
இதனை கண்டு சிவகுமார் அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முதல்கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ராமலிங்கம் வீடு கட்டுவதற்காகவும் சொந்த தொழில் செய்வதற்காகவும் பலரிடம் கடன் பெற்றுள்ளார். ஆனால் குறிப்பிட்ட காலத்தில் கடனை திரும்ப செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

பணத்தை கேட்டு மிரட்டல்?
இதனையடுத்து கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்பக் கேட்டு ராமலிங்கத்திடம் பேசியுள்ளனர். நேரிலும் தொலைப்பேசியிலும் பலமுறை கேட்டும் அவர் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து சிலர் ராமலிங்கத்தின் வீட்டுக்கு வந்து சத்தம் போட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். பலமுறை முயன்றும் கடன் கட்ட முடியாததால் வேற வழியின்றி குடும்பத்துடன் தற்கொலை முடிவுக்குச் சென்றதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

செல்போனை வைத்து விசாரணை
இதனையடுத்து ராமலிங்கம் மற்றும் பரத் ஆகிய இருவரின் செல்போன்களை போலீசார் கைப்பற்றி, அவர்களிடம் யார் யார் பேசினார்கள் என தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். முழுமையான விசாரணைக்கு பின்னரே தற்கொலைக்கான காரணம் தெரியும் என போலீசார் கூறியுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications