"தமிழக அதிகாரிகள் ஒழுங்கா வேலை செய்வதில்லை! டேட்டா கூட முறையாக இல்லை!" கடுகடுத்த மத்திய இணை அமைச்சர்
வேலூர்: வேலூரில் ஆய்வு செய்த மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, தமிழக அரசு அதிகாரிகளிடம் கடிந்து கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் நாராயணசாமி தலைமையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் பல இடங்களில் நிறைவேற்றப்பட்டு வரும் ஜல் ஜீவன் குடிநீர் திட்டம், ஸ்வச் பாரத் அபியான் திட்டங்களை அவர் நேரில் ஆய்வு செய்தார்.
“மிஷன் 2024”.. பாஜக களமிறக்கும் “சாணக்கியர்”! 3 மாநிலங்களுக்கு “டார்கெட்” - மலருமா “தாமரை”?
கடுகடுத்த அமைச்சர்
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அரசுத் திட்டங்களில் எதற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என்று இணை அமைச்சர் கேள்வி எழுப்பினார். அதற்கு அதிகாரிகள் முறையாகப் பதில் அளிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் அதிருப்தி அடைந்த மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, விரைவில் முழு புள்ளி விவரங்களைக் கொடுக்க வேண்டும் என்று கடுகடுத்து உள்ளார்.
இணை அமைச்சர் நாராயணசாமி
இறுதியில் வேலூரில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இணை அமைச்சர் நாராயணசாமி, "மத்திய அரசு ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு முன்னோடி திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறது. அதனை முழுமையாக மக்களுக்குச் சென்றடையும் வகையில் அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும்.
டேட்டா இல்லை
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மத்திய அரசின் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தேன். ஆனால் அரசு அதிகாரிகள் ஒருவர் கூட முழுமையாகக் கூட்டத்தில் புள்ளிவிவரங்கள் கூறவில்லை. மேலும் மத்திய அரசு எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு குறித்தும் அதிகாரிகளுக்குத் தெரியவில்லை . வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையில் எதற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என்ற முழு புள்ளி விவரத்தைக் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளேன்
தமிழக அரசு அதிகாரிகள்
கிராமப்புற வளர்ச்சி போல சில திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த தரவுகள் மட்டுமே அவர்களிடம் உள்ளது. மத்திய அரசு நிதியாக ஒதுக்கி உள்ள நிதி குறித்த தரவுகள் அவர்களிடம் இல்லை. தமிழக அரசு அதிகாரிகள் சரியாகச் செயல்படுவதில்லை கருவூலக கணக்குகளும் சரியாக இல்லை.. இது மிகவும் தவறானது வருத்தமளிக்கிறது. மத்திய அரசு வேலூர் மாவட்டத்திற்குப் பல திட்டங்களையும் பல கோடி நிதிகளையும் வழங்கியுள்ளது.
மத்திய அரசு திட்டங்கள்
வேலூர் மாவட்டத்தில் யோஜனா திட்டத்தின் கீழ் 36,000 வீடுகள் கட்டி முடித்திருக்க வேண்டும்.. ஆனால் தற்போது 3,900 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. ஜல்ஜீவன் திட்டம் குறித்து ஆய்வு செய்தபோது பல இடங்களில் குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. ஆதர்ஷ் கிராம திட்டம் குறித்த எந்த புள்ளி விவரமும் இல்லை. இந்த திட்டத்தின் கீழ் 35 கிராமங்களில் வளர்ச்சிக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கியது. ஆனால் வெறும் 6 கிராமங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மீண்டும் ஆய்வு
குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் மத்திய அரசினால் செயல்படுத்தப்பட்டு வரும் சுகாதாரம், கல்வி, கிராமப்புற வளர்ச்சி, ஒரே ரேஷன் கார்டு ஓரே நாடு திட்டம் குறித்தும் எந்த புள்ளி விவரமும் அதிகாரிகளிடம் இல்லை. மத்திய அரசுத் திட்டங்கள் குறித்து மீண்டும் அடுத்த மாதம் ஒரு ஆய்வுக் கூட்டத்தை நடத்த உள்ளேன்" என்று அவர் தெரிவித்தார்.