குழந்தையை தொங்க விட்டு.. தானும் தூக்கு மாட்டி உயிரை விட்ட ரம்யா.. பாழாய் போன வரதட்சணை கொடுமை!
குழந்தையை கொன்று பெண் தற்கொலை செய்து கொண்டார்
வேலூர்: குழந்தையை முதலில் தூக்கில் தொங்க விட்ட ரம்யா, பிறகு தானும் தொங்கி உயிரை விட்டார்.. வரதட்சணை கொடுமையே இந்த 2 உயிர்கள் பறிபோக காரணமாக இருந்துள்ளது.
அரக்கோணத்தை அடுத்துள்ளது மோசூர் என்ற கிராமம். இங்கு வசித்து வருபவர் சதீஷ்.. இவர் சென்னையில் அரசு பஸ் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்.. இவரது மனைவி ரம்யா.. போன 2016-ல் கல்யாணம் நடந்தது. அஸ்வதி என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை இவர்களுக்கு இருக்கிறாள். இப்போது ரம்யாவுக்கு வயசு 23.
கல்யாணத்தின்போது, 25 பவுன் நகை உள்ளிட்டவை வரதட்சணையாக ரம்யாவுக்கு தரப்பட்டது. ஆனால், இன்னமும் நகை வேண்டும் என்று ரம்யாவின் மாமியார் தொல்லை செய்து வந்துள்ளார். 3 பவுன் உடனே வாங்கி வா என்று கண்டிஷனாக சொல்லிவிடவும், ரம்யா கண்ணீர் வடித்தார். பெற்றோரிடம் இதை பற்றிசொல்லி அழுதுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கும் ஆளாகி.. யாருடனும் பேசாமல் இருந்துள்ளார்.

தற்கொலை
இந்நிலையில், நேற்று வீட்டில் ரம்யா மட்டும் குழந்தையுடன் உட்கார்ந்திருந்தார். அப்போதுதான் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு ரம்யா வந்தார்.. ஆனால், இவர்களை நம்பி குழந்தையை விட்டு சாக ரம்யா விரும்பவில்லை.. அதனால், முதலில் குழந்தையை ஊஞ்சல் கட்டும் கொக்கியில் சேலையை மாட்டி, அதில் தொங்க விட்டார்.. இதற்கு பிறகு தானும் தூக்கு போட்டு தொங்கினார்.

பிணம்
ரம்யாவின் மாமனார் ராஜேந்திரனும், மாமியார் தனலட்சுமியும் 100 நாள் வேலைக்கு சென்றுவிட்டு சாயங்காலம் வீட்டுக்கு திரும்பினர்.. அப்போது கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடவும் ரொம்ப நேரமாக தட்டிக் கொண்டிருந்தனர்.. ஒரு கட்டத்தில் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, தாயும், குழந்தையும் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அலறினர்.

போராட்டம்
தகவலறிந்து அரக்கோணம் டவுன் போலீஸார் விரைந்து வந்து சடலங்களை கைப்பற்றி விசாரணை ஆரம்பித்தனர். அதற்குள் விஷயம் தெரிந்து ரம்யாவின் பெற்றோரும், உறவினர்களும் கதறி கொண்டே வந்தனர்.. அரக்கோணம் போலீஸ் ஸ்டேஷனை இவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்..

கோரிக்கை
"வரதட்சணை கொடுமையால்தான் இந்த கொடூரம் நடந்துள்ளது.. என் மகளின் மாமியார், மாமனார், கணவரை கைது செய்ய வேண்டும்.. தற்கொலை வழக்குன்னு மட்டும் பதிவு பண்ணிடாதீங்க.. நிறைய முறை வரதட்சணை கொடுமை பத்தி சொல்லி எங்க பொண்ணு அழுதிருக்காள்.. அவங்களை கைது செய்யுங்க" என்று போலீசாருடன் முழக்கமிட்டு கோரிக்கை வைத்தனர். ரம்யாவுக்கு கல்யாணமாகி 3 வருடமே ஆவதால் உதவி கலெக்டரும் இதில் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications