ஜெயலலிதாவைக் காண நாளை அமித் ஷா சென்னை வருகிறார் #jayalalithaa
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரிக்க பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா நாளை சென்னை வருகிறார். அவருடன் நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் சென்னை வருகிறார். இருவரும் நாளை மாலை அப்பல்லோ மருத்துவமனைக்கு செல்லவுள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பார்க்க பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் வந்தவண்ணம் உள்ளனர். கேரள முதல்வர் பினரயி விஜயன் கூட வந்திருந்தார். இந்த நிலையில் நாளை பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் அப்பல்லோ வரவுள்ளனர்.
நாளை மாலை 3 மணிக்கு சென்னைக்கு வரும் இவர்கள் 5 மணியளவில் அப்பல்லோ சென்று முதல்வர் உடல் நலம் குறித்து கேட்டறியவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களுடன் தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசையும் உடன் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில்தான் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அதிரடியாக அப்பல்லோவுக்கு வந்து பல கட்சிகளுக்கு ஷாக் கொடுத்துச் சென்றார் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் இன்னொரு முக்கியக் கட்சியான பாஜகவின் தலைவர் அமித் ஷா நாளை வரவுள்ளார்.
ஜெயலலிதாவைப் பார்க்க பிரதமர் மோடி வருவாரா என்று தெரியவில்லை. அவர் வர வாய்ப்பில்லை என்று பாஜக வட்டாரத்திலேயே பேசிக் கொள்கிறார்கள்.