விழுப்புரம் அருகே அண்ணா சிலை அவதிப்பு - மர்ம நபர்கள் அராஜகம் - பதற்றம் போலீஸ் குவிப்பு!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலையை, மர்ம நபர்கள் சிலர் அவமரியாதை செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
திமுக-வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, ஹிந்துக்கள் குறித்தும், சனாதனம் குறித்தும் தனது கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரின் இந்த கருத்துக்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும், ஆ.ராசாவின் பேச்சுக்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு, திமுக எம்.பி. ஆ.ராசாவின் புகைப்படத்துடன் கூடிய செருப்பு மாலையை அணிவித்து, மர்ம நபர்கள் சிலர் அவமரியாதை செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கண்டகமங்கலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே, விழுப்புரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலை அமைந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை மர்ம நபர்கள் சிலர், பேரறிஞர் அண்ணாவின் சிலையை சிகப்பு துணியால் மூடிவிட்டு, சிலைக்கு, திமுக எம்.பி. ஆ.ராசாவின் புகைப்படத்துடன் கூடிய செருப்பு மாலையை அணிவித்துச் சென்றுள்ளனர்.
இன்று காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள், பேரறிஞர் அண்ணாவின் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில், கண்டமங்கலம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அண்ணாவின் சிலைக்கு அணிவிக்கப்பட்ட செருப்பு மாலையை உடனடியாக அகற்றினர்.
இதனிடையே, இச்சம்பவம் குறித்த தகவல் காட்டுத் தீயாக பரவியதால், திமுகவினர் அங்கு குவிந்தனர். பின்னர் அவமதிக்கப்பட்ட அண்ணாவின் சிலை முன்பு திடீரென திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரறிஞர் அண்ணா சிலையை அவமதித்தவர்களை, உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவர்கள் முழக்கமிட்டதால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இதனையடுத்து, சம்பவம் நிகழ்ந்த கண்டமங்கலத்திலும், பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலை அமைந்துள்ள இடம் முன்பாகவும் பாதுகாப்புப் பணியை போலீசார் தீவிரப்படுத்தினர். மேலும், இந்த சம்பவம் குறித்து, கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பேரறிஞர் அண்ணாவின் திருவுருச் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து, அவமதித்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தலைவருக்காக விட்டுக் கொடுங்க! சமாதானம் பேசும் அன்பகம் கலை -கே.என்.நேரு! அண்ணா அறிவாலயம் ரவுண்ட் அப்!