கேரளாவை மிஞ்சிய சம்பவம்! பெற்ற தாயை உயிரோடு புதைத்த மகன்! வெலவெலத்த விழுப்புரம்! அதிர்ந்து போன போலீஸ்
விழுப்புரம் : விழுப்புரத்தில் குடும்ப சண்டை என பெற்ற தாயை அடித்து உயிரோடு மண்ணில் புதைத்துக் கொன்ற மகனை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கேரளா போல் நரபலி விவகாரம் ஏதும் இருக்கிறதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளா மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு பெண்கள் கொடூரமாக கொல்லப்பட்டு நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கொலை செய்யப்பட்ட பெண்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த கொலை தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் நாளுக்கு நாள் வெளியாகி வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் பெற்ற தாயை மகன் உயிரோடு மண்ணில் புதைத்து கொலை செய்த சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இது குடும்பத் தகராறு காரணமாக நடந்த கொலை என போலீசார் கூறுகின்றனர்.

விழுப்புரத்தில் அதிர்ச்சி
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள சித்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை சேகரித்து அதனை விழுப்புரத்தில் விற்கும் வேலை பார்த்து வந்திருக்கிறார். இவருக்கு திருமணம் ஆகி நான்கு குழந்தைகள் இருக்கும் நிலையில் தனது மனைவியுடன் தனியே வசித்து வந்துள்ளார். அவரது தாயான அசோதை அதே பகுதியில் தனியாக வசித்து வந்திருக்கிறார்.

தாயுடன் தகராறு
இருவருக்கும் குடும்ப அட்டை தொடர்பாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் தலைக்கேறிய மதுபோதையில் தாயை பார்க்க சென்றிருக்கிறார் சக்திவேல். அப்போது குடும்ப அட்டையை தன்னிடம் தர வேண்டும் என தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மது போதையில் வந்து தகராறு செய்த சக்திவேலை வீட்டுக்குச் செல்லுமாறு அசோதை கூறியிருக்கிறார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

உயிரோடு புதைப்பு
வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த சக்திவேல் தனது தாய் என்றும் பாராமல் சரமாரியாக தாக்கி இருக்கிறார். இதில் தலையில் காயம் அடைந்த அவர் மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். தலைக்கேறிய மது போதையில் இருந்த சக்திவேல் தனது தாய் அடித்ததால் இறந்து விட்டதாக கருதி வீட்டின் பின்புறத்தில் பள்ளம் தோண்டி உயிரோடு இருந்த தாயே மண்ணில் புதைத்து இருக்கிறார். மேலும் வீட்டின் அருகிலேயே பித்து பிடித்தது போல அமர்ந்திருக்கிறார். இதனைக் கண்டு அருகில் இருந்தவர்கள் கேட்டபோது சக்திவேல் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் இதுகுறித்து அரகண்டநல்லூர் காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர்.

மகன் கைது
இதை அடுத்து அங்கு வந்த போலீசார் சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் தாயை உயிரோடு புதைத்த இடத்தை அடையாளம் காட்டினார் சக்திவேல். இதை அடுத்து அங்கு வந்த மருத்துவ குழுவினர் அசோதையின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வுக்காக விழுப்புரம் கொண்டு சென்றனர். மது போதையில் தாயை உயிரோடு மகன் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications