2 வருஷத்தில் கசந்த காதல்! விபரீத முடிவெடுத்த "சித்தாமூர் குஷ்பூ!" ஆலமரத்தடியில் கட்டப் பஞ்சாயத்து
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண் திருமணமான இரண்டு ஆண்டுகளில் கணவனின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அந்தப் பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பிரதான சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள காட்டுச் சித்தாமூர் கிராமத்தை சேர்ந்தவர் குஷ்பூ வயது 28. இவர் பெங்களூருவில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியில் கட்டிடத் தொழில் செய்துவந்த ஆறுமுகம் என்பவருடன் குஷ்பூ காதல் வயப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மேலும் ஆறுமுகம் உயர் வகுப்பை சேர்ந்தவர் என்பதாலும் குஷ்பூ தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பெற்றோர்கள் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை.
ஐஐடி/ஐஐஎம்மில் படித்தால் வீடு வாடகைக்கு! பெங்களூரில் ஓனர்கள் அட்ராசிட்டி! நீயா நானா லிஸ்டில் இல்லீயே
காதல் திருமணம்
இதன் காரணமாக பெங்களூருவில் ஓராண்டுக்கும் மேலாக இருவரும் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்னர் ஆறுமுகத்தின் தாயாருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை காண்பதற்காக மனைவியுடன் சொந்த ஊரான கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள சிவனார்த்தாங்கள் கிராமத்திற்கு வந்துள்ளார். முதலில் குஷ்புவை ஏற்றுக் கொள்ளாத ஆறுமுகத்தின் தாயார் பின்னர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
மதுவுக்கு அடிமை
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆறுமுகத்தின் தாயார் உயிரிழந்துள்ளார். அதன் பின்னர் குஷ்பூவும் ஆறுமுகமும் சொந்த ஊரான சிவனார்த்தங்களிலேயே வசித்து வந்தனர். ஆறுமுகம் மதுவிற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதன் காரணமாக அடிக்கடி கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் குஷ்புவிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு திட்டுவதையும் அடிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார் ஆறுமுகம்.
தற்கொலை
இந்த நிலையில் ஆறுமுகத்தின் தொடர் தொல்லை தாங்க முடியாத குஷ்பூ கடந்த 25ஆம் தேதி மாலை பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் இது குறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீசார் குஷ்புவின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து குஷ்புவின் உறவினர்களுக்கு முறையாக தகவல் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக 26 ஆம் தேதி வெளியூரில் வேலை செய்து வந்த குஷ்புவின் உறவினர்கள் திருக்கோவிலூர் காவல் நிலையத்திற்கு வந்து குஷ்புவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் கொடுத்துள்ளனர்.
கட்டப்பாஞ்சாயத்து
அந்த புகாரின் அடிப்படையில் திருக்கோவிலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து குஷ்புவின் உடல் அவரது கணவர் வீடான சிவனார்த்தாங்கள் கொண்டுவரப்பட்டது. குஷ்புவின் இறப்பிற்கு நீதி கேட்டு அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்துள்ளனர். மேலும் குஷ்புவின் இறப்பு குறித்து சிவனார்த்தங்கள் பகுதியில் உள்ள ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் கட்டப்பஞ்சாயத்து செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் குஷ்புவின் பிரேதத்தை வாங்க மறுத்ததால் போலீசார் அவரது உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாலை மறியல்
இதனை பொறுத்துக் கொள்ள முடியாத உறவினர்கள் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட அறகண்டநல்லூர் அருகே உள்ள துரிஞ்சல் ஆற்று மேம்பாலத்தில் அமரர் ஊர்தியின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி அமர்வு ஊர்தியிலிருந்த பெண் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
இந்த சாலை மறியல் காரணமாக திருக்கோவிலூர் விழுப்புரம் பிரதான சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. காதலித்து திருமணம் செய்து அந்த வாழ்க்கை கசந்து போய், பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் நடைபெற்று இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில் பெண் உயிரிழந்த வழக்கு சம்பந்தமாக வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.