கனமழை.. ஓடைகளில் பெருகிய வெள்ளம்.. சதுரகிரி மலைக் கோவிலுக்கு செல்ல தடை - பக்தர்கள் ஏமாற்றம்
விருதுநகர்: ஆடி பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது. மலையேறி சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் வனத்துறையினர் விதித்துள்ள தடையால் ஏமாற்றமடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தரைமட்டத்தில் இருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்.இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் மாதந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.
கல்லாலமரம்' என்ற விருட்சத்தின் அடியில் சந்தன மகாலிங்கத்தை ஸ்தாபித்து அன்னை பார்வதி விரதம் இருந்த நாள் ஆடி அமாவாசை. ஆடி அமாவாசை, ஆடி பவுர்ணமி, சித்திரை மாத பௌர்ணமி தினம், மார்கழி திருவாதிரை நட்சத்திரத்திலும் இந்த சதுரகிரி ஈசனை வணங்க ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். இக்கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை,பவுர்ணமி என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சித்தர்கள் வாழும் சதுரகிரி!.. அமாவாசையில் தரிசித்தால் தீராத நோய்களும் தீரும்!!
சதுரகிரி கோவில் சிறப்பு
சதுராசலம், சித்தர்கள் தேசம், சிவன்மலை, மூலிகைவனம் என்று பெரியோர்களால் போற்றப்படும் சதுரகிரி மலையில் கோயில் கொண்டுள்ளார், சுந்தர மகாலிங்கப் பெருமானார். மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் கோடியருகே மேற்பகுதி தட்டையான, சதுர வடிவிலான நான்கு மலைகள் உண்டு. நான்கு வேதங்களே சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தர்கிரி என்ற பெயர்களில் மலைகளாகி நிற்க, அவற்றின் நடுவில் கம்பீரமாக அமைந்திருக்கிறது சதுரகிரி. மூலிகைகள் நிரம்பிய மலையின் மேல் சிவபெருமான் வீற்றிருக்கிறார். சதுரகிரியை அகஸ்தியர் உள்ளிட்ட சித்தர்கள், பஞ்சபூத லிங்கம் என்பர். இந்த மகாலிங்க மலையை 'சித்தர்கள் வாழும் பூமி' என்று அழைக்கின்றனர்.
சித்தர்கள் வாழும் பூமி
இன்றைக்கும் சட்ட நாதமுனி, கோரக்க முனிவர் உள்ளிட்ட பதினெட்டு சித்தர்களும் தபசை கலைத்து, ஒவ்வோர் ஆடி அமாவாசையிலும் இங்குள்ள புனித ஆகாய கங்கை தீர்த்தம், கௌண்டின்ய தீர்த்தம், சந்திர தீர்த்தங்களில் உஷத் காலத்தில் நீராடி சந்தன மகாலிங்கத்தை வணங்குவதாக அகஸ்தியர் நாடி சொல்கிறது. சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. கோவிலுக்கு செல்லும் வழியெங்கும் பல நீரோடைகள் உள்ளன.
சதுரகிரி மலை
மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும். செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன. இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன.
வழுக்கும் பாறைகள்
இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம். சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம். அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு. இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது.
ஆடி பவுர்ணமி
இந்நிலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு இம்மாத பிரதோஷம் மற்றும் ஆடி பௌர்ணமியை முன்னிட்டு இன்று முதல் வரும் 12ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் கோயிலுக்கு செல்ல கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பக்தர்கள் செல்லத்தடை
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஸ்ரீவில்லிபுத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது.இதனால் சங்கிலிப்பாறை தாணிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் 11ஆம் தேதி ஆடி பவுர்ணமி முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் மலையேறி சாமி தரிசனம் செய்யவார்கள் என்பதால் பாதுகாப்பு கருதி பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளது. மலையேறி சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் வனத்துறையினர் விதித்துள்ள தடையால் ஏமாற்றமடைந்துள்ளனர்.