சாதி, மதம் வீட்ல இருக்கனும்.. மனிதனை மதிப்பதே சுதந்திரம்! மாணவர்களுக்கு விருதுநகர் ஆட்சியர் அட்வைஸ்
விருதுநகர்: மதம், சாதி, இனம் எல்லாம் நம் வீட்டுக்குள் மட்டுமே இருக்க வேண்டும், வெளியே வந்தால் நாம் அனைவரையும் ஒன்றாக கருத வேண்டும் எனவும் சக மனிதனை மனிதாக மதிப்பதே உண்மையான சுதந்திரம் எனவும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி பேசி இருக்கிறார்.
மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் "அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த 3 நாள் நடைபெறும் புகைப்படக் கண்காட்சி விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது.
மத்திய அரசின் கள விளம்பர உதவியாளர் போஸ்வெல் ஆசிர் வரவேற்றார். சென்னை மண்டல அலுவலக மத்திய மக்கள் தொடர்பாக இயக்குநர் காமராஜ் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
மொத்தம் 3 கேள்வி தான்.. அடாது மழையிலும் விடாது பிரஸ்மீட்! அதிமுகவை பந்தாடிய முதல்வர் ஸ்டாலின்!
ஆட்சியர் மேகநாத ரெட்டி
இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சக மத்திய மக்கள் தொடர்பகம் மற்றும் பத்திரிக்கை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநர் அண்ணாதுரை தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி கலந்துகொண்டு புகைப்படக் கண்காட்சியைத் திறந்து வைத்து பார்வையிட்டு சிறப்புரையாற்றினார்.
ஜிடிபியில் முன்னேறிய இந்தியா
நிகழ்ச்சியில் பேசிய அவர், "சுதந்திரப் போராட்ட வரலாற்றில் விருதுநகருக்கு சிறப்பிடம் உண்டு. இன்று நாம் சுதந்திரத்தை அனுபவித்து வருகிறோம். ஆனால், அதற்காக பாடுபட்டோர், உயிர் நீத்தோரை நம் நினைவு கூற வேண்டும். நம்மை அடிமைப்படுத்தி இருந்த பிரிட்டிஷ் அரசை விட தற்போது நாம் பொருளாதாரத்தில் முன்னேறி உலக அளவில் ஜிடிபியில் 5வது இடத்தில் உள்ளோம்.
சாதி, மதம் பார்க்கக் கூடாது
உலக அளவில் இந்தியர்கள் பலர் தலைசிறந்து விளங்குகிறார்கள். நம்மிடையே ஒற்றுமை இல்லையெனில் நிலையான வளர்ச்சியை அடைய முடியாது. நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்கள் சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு பார்க்கவில்லை. மதமும், இனமும், சாதியும் நம் வீட்டுக்குள் மட்டுமே இருக்க வேண்டும். வெளியே வந்தால் அனைவரையும் ஒன்றாகக் கருத வேண்டும்.
மனிதனை மதிக்க வேண்டும்
இந்த பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்க வேண்டும். சக மனிதனை மனிதாக மதிப்பதே உண்மையான சுதந்திரம்." என்றார். இந்த கண்காட்சியில் சுதந்திரப் போராட்ட வீரர்கள், தேசியத் தலைவர்கள் புகைப்படங்கள் மட்டுமின்றி விருதுநகர் மாவட்டத் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் படங்களும் இடம்பெற்று இருந்தன.
விடுதலை போராட்ட தியாகிகள்
குறிப்பாக கல்லூரணி முத்துப்பிள்ளை, எம்.புதுப்பட்டி பொன்னுச்சாமி, விருதுநகர் சங்கரன், ஆலமரத்துப்பட்டி சீனிவாசன், சாமிநாதபுரம் தங்கமுத்து, அருப்புக்கோட்டை நாகூர்சாமி, ராமானுஜம், ராஜபாளையம் சங்கர்ராஜா, சிவகாசி சீனிவாசநாடார், சேத்தூர் தெட்சிணாபிள்ளை, உள்பட ஏராளமானோர் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
மாணவர்களுக்கு உதவி
இந்த கண்காட்சியைப் பார்வையிட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் புகைப்படத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களை பார்த்து வியப்படைந்தனர். இந்த நிகழ்ச்சியில், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கும், ஆரோக்கிய குழந்தை போட்டியில் வென்றவர்களுக்கும், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கும் பரிசு மற்றும் கடனுதவியை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.