பள்ளிக் கல்வித்துறை அடிக்கடி யூ டர்ன் போடுதே ஏன்.. வந்து விழுந்த கேள்வி.. அன்பில் மகேஷ் சொன்ன பதில்
விருதுநகர்: மாணவர்களின் நலனுக்காக திட்டங்களில் இருந்து பின்வாங்குவதில் தவறில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார்.
அண்மைக் காலமாக அமைச்சர் அன்பில் மகேஷ் செயல்பாடுகளும், பள்ளிக் கல்வித்துறை செயல்பாடுகளும் எதிர்க்கட்சி மற்றும் சமூக ஆர்வலர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக பள்ளிக் கல்வித்துறையில் ஒரு திட்டத்தை அறிவித்துவிட்டு, பின்வாங்குவது தொடர் கதையாகி வருகிறது. இது கடந்த ஓராண்டாகவே தொடர்ந்து வருவது தான் தற்போதைய விமர்சனத்திற்கு காரணமாக உள்ளது. எல்ஜேஜி, யுகேஜி வகுப்புகள் மூடல் தொடங்கி, ஆசிரியர்கள் நியமனம் வரை பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது.
இதனால் மாணவர்களும், ஆசிரியர்களும் குழப்பமடைந்து வருகின்றனர். அதேபோல் மாணவர்களிடையே போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு, அண்மைக் காலமாக அதிகரிக்கும் தற்கொலைகளாலும் விமர்சனம் அதிகரித்துள்ளன.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ராம்கோ கல்லூரியில் தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு மேம்பாட்டிற்கான கருத்தாளர் பயிற்சி நடைபெற்று வருகிறது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில்தான் தலைமை ஆசிரியர்களை தங்க வைத்து இதுபோல் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு ரூ.9.5 கோடி வழங்கப்படுகிறது. பள்ளிக் கல்வித்துறை திட்டங்களை அறிவித்துவிட்டு பின்னர் பின்வாங்குவதாக எழும் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த அவர், பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக பல மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று நாம் நினைக்கிறோம்.
டேப்லெட் உடைஞ்சுரும்.. மாணவர்களுக்கு லேப்டாப் தான்! ஹாப்பி நியூஸ் கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
அதற்காக சில பின்வாங்குவது என்பது தவறில்லை. மக்களுக்காக சமூக சேவையாக செய்யும் துறைதான் பள்ளிக் கல்வித்துறை. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டே, பின்வாங்குகிறோம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, போதைப் பொருட்களை கட்டுப்படுத்த காவல்துறை தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டுள்ளது. போதை இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற தமிழக முதலமைச்சரின் கனவு விரைவில் நனவாகும் என்று தெரிவித்தார்.