எங்களுக்கு சாதி இல்லை மதம் இல்லை! சர்டிஃபிகேட் வாங்கிய விருதுநகர் தம்பதி! குழந்தைகளுக்கும் அதேதான்!
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தங்களுக்கு சாதியும் இல்லை மதமும் இல்லை என சான்றிதழ் வாங்கியுள்ள தம்பதியினர், தங்களது இரு குழந்தைகளுக்கும் சாதி மதம் இல்லை என சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசிஅருகே உள்ள தேவர்குளம் பஞ்சாயத்து பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். பட்டதாரி இளைஞரான இவர் கணினி பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிவகாசி தாலுகா அலுவலகத்தில் தனக்கும், தனது மனைவி சர்மிளாவுக்கும் சாதி, மதம் அற்றவர்கள் சான்றிதழ் வேண்டும் என்று விண்ணப்பம் கொடுத்துள்ளார்.
ஜாதி, மதம் இல்லை.. சான்றிதழ் வாங்கி அசத்திய கோவை நபர்.. மூன்றரை வயது மகளுக்காக 'சாதி’த்த அப்பா!
சாதி இல்லை என சான்றிதழ்
அப்போது, விண்ணப்பத்தை பெற்ற அதிகாரிகள், இதுவரை இப்படி சான்றிதழ் இந்த தாலுகா அலுவலகத்தில் யாருக்கும் கொடுத்தது இல்லை என கூறியுள்ளனர். அப்போது காத்திகேயன், இந்தியாவில் இதுவரை 7 பேர் சாதி, மதம் அற்றவர்கள் என்ற சான்றிதழ் பெற்றுள்ளார்கள்.
சாதி, மதம் அற்றவர்கள்
அதில் 6 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்று கூறி அதற்கான ஆதாரத்தையும் காட்டியுள்ளார். பின்னர் சில நாட்கள் கழித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி கார்த்திகேயன், அவரது மனைவி சர்மிளா ஆகிய இருவருக்கும் சாதி, மதம் அற்றவர்கள் என்ற சான்றிதழை வழங்கி உள்ளனர்.
இரு குழந்தைகள்
எங்களுக்கு 2 குழந்தைகள் மூத்த மகன் நேசன் (4) தற்போது தனியார் பள்ளி ஒன்றில் யு.கே.ஜி. படித்து வருகிறான். அவனுக்கும் சாதி,மதம் அற்றவர் என்ற சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து இருக்கிறேன். மேலும் 2வது மகன் கரிகாலனுக்கு தற்போது 2 வயது தான் ஆகிறது.
பாராட்டுகள் குவிகிறது
அவனுக்கும் இதே சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளேன் என தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக. கோவையைச் சேர்ந்த பெற்றோர் ஒருவர் தனது பெண் குழந்தைக்கு சாதி, மதம் இல்லாமல் சான்றிதழ் வாங்கியுள்ளனர். தற்போது தம்பதி ஒருவரும் இதுபோன்று தங்களுக்கு சாதி, மதம் அற்றவர்கள் என்ற சான்றிதழ் வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சாதி மதம் இல்லை என சான்றிதழ் பெற்ற தம்பதியினருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.