தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?.. இதுக்கு வருவாய்த்துறை அமைச்சரின் பதில் இதுதான்!
விருதுநகர்: தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்படுமா? என்பது குறித்து வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பதில் அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் 14 நாள் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது.
தேசியளவில் ஊரடங்கு அறிவிப்பு மட்டுமே இல்லை.. 98% மக்கள் ஏதோ ஒரு வகையான.. லாக்டவுன் கீழ் தான் உள்ளனர்
அதிகாரிகள் ஆலோசனை
இந்த நிலையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் கொரோனாவை குறைப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
ஆக்சிஜன் இருப்பு உள்ளது
அதன்பின்னர் தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:- விருதுநகர் மாவட்டத்தில் நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதிகள், மற்றும் ஆக்சிஜன் வசதிகள் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் உள்ளது.
மக்கள் ஒத்துழைப்பு அவசியம்
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுப்பார். ஊரடங்கினால் அன்றாட வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கபடுகிறார்கள் என்பது வருத்தம் அளிக்கிறது. ஆனாலும் இந்த கொடூரமான வைரசை ஒழிக்க அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
முதல்வர் முடிவெடுப்பார்
வருகிற 24-ம் தேதிக்குப் பிறகு பாதிப்புகள் குறைந்தால் ஊரடங்கு நீட்டிப்பு இருக்காது. ஆனால் பாதிப்புகள் அதிகமாக இருந்தால் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு இருக்கிறது என்று அமைச்சர் தெரிவித்தார். ஊரடங்கு காரணமாக வியாபாரிகள், தினசரி கூலி வேலைக்கு செல்லும் கிராமப்புற மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.