ஈரோடு இடைத்தேர்தல்.. வேட்பாளர் அறிவிப்பு எப்போது? குலதெய்வ வழிபாட்டுக்கு பின் ஓபிஎஸ் சொன்ன பதில்!
எங்கள் தரப்பில் போட்டியிடும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் எங்கள் தரப்பில் போட்டியிடும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்து வேகம் காட்டி வரும் நிலையில், ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர் தேர்வில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காரணமாக தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்தது. திமுக கூட்டணி சார்பாக மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
உறுதியாக சொன்ன டிடிவி தினகரன்.. ஈரோடு கிழக்கில் ஓபிஎஸ் அமமுகவை ஆதரிப்பாரா? அப்போ பாஜக? குழப்பம்!
அதிமுக நிலை
ஆனால் அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனித் தனியாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் வேட்பாளர்களை நிறுத்த நிர்வாகிகள் திட்டமிட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி தரப்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இபிஎஸ் தரப்பில் தேர்தல் பணிக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அதிமுக வேட்பாளர் தென்னரசு?
அதில் முன்னாள் அமைச்சர் கேவி ராமலிங்கம் பெயர் இடம்பெற்றுள்ளதால், முன்னாள் எம்எல்ஏ கே.எஸ். தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில் அடுத்தடுத்து பணிகளும் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேரடியாக ஈரோடு வந்த இபிஎஸ், முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தையும் நடத்தி முடித்துள்ளார்.
விரைவில் அறிவிப்பு
இதற்கிடையே, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பக தோப்பு பகுதியில் ஓ.பன்னீர்செல்வம் அவரது குலதெய்வ கோயிலான வன பேச்சி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜையில் ஈடுபட்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு வரும் 31ம் தேதி முதல் தொடங்குகிறது. எங்கள் தரப்பில் விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.
பாஜக நிலைப்பாடு
கடந்த சில நாட்களாக கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெறுவதில் ஓபிஎஸ் மும்முரம் காட்டி வந்தார். குறிப்பாக பாஜகவின் ஆதரவை பெறுவது யார் என்பதில் இரு தரப்புக்கும் போட்டி நிலவியது. ஆனால் இதுவரை பாஜக தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இதனால் பாஜகவின் நிலைப்பாட்டை பொறுத்தே ஓபிஎஸ்-ன் அடுத்தக்கட்ட நகர்வு இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.