கல்லூரி தேர்வில் நூதன முறையில் 'பிட்'.. வேற லெவலில் யோசித்த மாணவர்.. 'பத்ரி விஜயை' மிஞ்சிய சம்பவம்!
வாஷிங்டன்: ஸ்பெயினில் உள்ள பல்கலைக்கழகத்தில் சட்ட கல்லூரி மாணவர் ஒருவர் நூதன முறையில் 'காப்பி' அடித்துள்ள சம்பவம் தற்போது உலக அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. அவரது பேராசிரியரே மாணவர் நூதன பிட் ரகசியத்தை பிட்டை பார்த்து வியந்து போயுள்ளார்.
பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகளில் மாணவர்கள் 'காப்பி' அடிப்பது ஆங்காங்கே நடைபெறத்தான் செய்கிறது.
தேர்வு அறைகளில் கண்காணிப்பாளர்கள் எவ்வளவுதான் ஸ்ட்ரிக்ட் ஆக இருந்தாலும் பல நேரங்களில் காப்பி அடிப்பதை தடுக்க முடியவில்லை.
காப்பி அடிக்க பயன்படுத்தும் மூளையை..
அந்த அளவுக்கு திறமையாக 'காப்பி' அடிக்கும் மாணவர்களும் இருக்கிறார்கள். காப்பி அடிப்பதற்கு பயன்படுத்தும் மூளையை படிப்பில் காட்டினால் முதல் மதிப்பெண் உனக்குதான் கிடைக்கும் என்று கூட சில மாணவர்களை ஆசிரியர்கள் திட்டுவதை கேள்வி பட்டு இருப்போம். நேரில் கூட பார்த்து இருப்போம். காப்பி அடிப்பதை வைத்து சினிமாவில் கூட நகைச்சுவையாக பல காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
'பத்ரி' படத்தில் விஜய்
விஜய் நடித்த பத்ரி படத்தில் கூட இப்படி ஒரு காட்சி இருக்கும். கையில் கட்டுடன் நடக்க முடியாமல் வரும் விஜயை பார்த்து பரிதாபப்படும் தேர்வு அறை கண்காணிப்பாளர், விஜய்க்கு பிள்ளையார் சுழி போட்டு கூட கொடுப்பார். ஆனால், சில நொடிகளில் அப்படியே மாறிவிடும். பிட் அடிப்பதற்காக தான் விஜய் அப்படி கெட்டப் போட்டு வந்திருக்கிறார் என்பதை பார்த்ததும் அவரை தேர்வு அறையில் இருந்து விரட்டும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.
ஸ்பெயினில் சம்பவம்
தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டதால் அதனை பயன்படுத்தி காப்பி அடிக்கும் நிகழ்வுகளும் அதிகரித்துள்ளது. இதனால், மின்னணு பொருட்கள் எதற்கும் அனுமதி அளிப்பது கிடையாது. தேர்வு நடைபெறும் இடங்களில் இணையதளங்கள் கூட முடக்கப்படுகின்றன. இப்படி காப்பி அடிக்க எத்தனையோ முயற்சிகள் நடந்தாலும் அதையும் மீறி மாணவர்கள் யோசிக்கிறார்களோ.. என கருத வைக்கும் வகையில் ஸ்பெயினில் ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது.
11 பேனாக்களில் முழு பாடத்தையும்..
ஸ்பெயினில் உள்ள சட்ட மாணவர் ஒருவர் தேர்வின் போது காப்பி அடிப்பதற்காக பேனாவில் மிகச் சிறிய எழுத்துக்களில் 'நோட்ஸ்களை' எழுதி கொண்டு வந்துள்ளார். இதை தேர்வு கண்காணிப்பு அறையில் இருந்த பேராசிரியர் யோலண்டா டி லுச்சி என்பவர் எப்படியோ கண்டுபிடித்து விட்டார். மாணவரிடம் இருந்து பேனாக்களை பறிமுதல் செய்துவிட்டு முழுக்கதையையும் தனது சமூக வலைத்தளத்தில் அந்த பேராசிரியர் பகிர்ந்து இருக்கிறார். மொத்தம் 11 பேனாக்களில் இப்படி ஒட்டுமொத்த பாடத்தையும் அந்த மாணவர் எழுதிக்கொண்டு வந்து விட்டாராம்.
நெட்டிசன்கள் கமெண்ட்
இது குறித்து ஸ்பெயினின் மலாகா பல்கலைக்கழக பேராசிரியர், யோலண்டா டி லுச்சி தனது ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், 'கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக மாணவர் ஒருவரிடம் பறிமுதல் செய்ததாகவும் என்ன ஒரு 'கலை' (Art) என்றும் பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு கீழே நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
காப்பி அடிப்பதை தடுக்கவில்லை
ஸ்பெயினின் குற்றவியல் நடைமுறை சட்டத்தை 10 பேனாக்களில் எழுதிய நபர் ஜீனியஸ்.. என்ன ஒரு ஆர்ட் என்று நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றொரு நெட்டிசன் கூறுகையில், 'நான் ஆசிரியராக இருந்த போது, தேர்வு அறையில் ஒருபோதும் காப்பி அடிப்பதை தடுக்கவில்லை. ஏனெனில் காப்பி அடிக்கும் மாணவர்கள் அதற்காக மெனக்கட்டு எழுதி வைக்கின்றனர். இந்த விடையை ஒருபோதும் அவர்கள் மறப்பதில்லை. எனவே, நான் இப்படி செய்தேன்' என்று பதிவிட்டுள்ளார்.