சாரி, புதைக்க இடமில்லை... கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை திரும்பி அளிக்கும் அவலம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் தற்போது தினமும் சராசரியாக 2,500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் உயிரிழக்கின்றனர்.
இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களைப் புதைக்கும் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கான்டினென்டல் நிறுவனம் தற்போது சராசரியாக 30 உடல்களைப் புதைக்கும் சூழல் ஏற்படுள்ளதாகவும் இது வழக்கமாக தாங்கள் புதைக்கும் உடல்களின் எண்ணிக்கைகளைவிட ஆறு மடங்கு அதிகம் என்றும் கூறியுள்ளது.

அந்நிறுவனத்தின் தலைவர் மாக்டா மால்டொனாடோ கூறுகையில், "நான் 40 ஆண்டுகளாக இத்தொழில் ஈடுபட்டுள்ளேன். புதைக்க இடமில்லை என்று கூறி உயிரிழந்தவரின் குடும்பத்திடமே உடல்களைத் திரும்பி அளிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்று இதுவரை நான் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை" என்று கூறினார்.
மேலும், அருகில் இருக்கும் மற்ற நிறுவனங்களிடம் உடல்களை ஒப்படைக்கலாம் என்று கேட்டால் அவர்களிடமும் இடம் இல்லை என்பதே பதிலாக வருவதாக அவர் தெரிவித்தார். இதனால் கலிபோர்னியா மாகாணம் முழுவதுமே உயிரிழந்தவர்களின் உடல்களை எரிக்கும் அல்லது புதைக்கும் நடைமுறைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வழக்கமாக உயிரிழப்பவர்களின் உடல்கள் இரண்டு நாட்களுக்குள் புதைக்கப்படும், ஆனால் தற்போது ஒரு வாரத்திற்கும் மேலாவதாக கலிபோர்னியா மாகாண இறுதிச் சடங்கு நிறுவனத்தின் இயக்குநர் பாப் அச்சர்மன் கூறியுள்ளார். "மாகாணத்தில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் தங்களால் முடிந்த வரை வேகமாகச் செயல்படுகின்றன. இருப்பினும், உயிரிழப்பு விகிதம் மிக அதிகமாக இருப்பதால் அதற்கு ஈடு கொடுக்க முடியவில்லை" என்றார்,
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2.14 லட்சம் பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.06 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல கொரோனா உயிரிழப்புகளும் 3.5 லட்சத்தைத் தாண்டியுள்ளது.












Click it and Unblock the Notifications