3வது கட்ட கொரோனா தடுப்பூசி டிரையல் 90% வெற்றி! "மனித குலத்திற்கு மகத்தான நாள்"- அமெரிக்க நிறுவனம்
வாஷிங்டன்: கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி உற்பத்தியின் முக்கிய திருப்பமாக, மூன்றாவது கட்ட தடுப்பூசி பரிசோதனையின்போது 90 சதவீதம் பேருக்கு வெற்றிகரமாக அது பலன் கொடுத்துள்ளது என்று அமெரிக்காவைச் சேர்ந்த ஃபைசர் மற்றும் ஜெர்மனி கூட்டாளியான பயோஎன்டெக் அறிவித்துள்ளன.
கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிப்பில் உலகின் பல்வேறு நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன. இங்கிலாந்து நாட்டின், ஆக்ஸ்போர்டு தடுப்புமருந்து, அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன், மாடர்னா உள்ளிட்ட 6க்கும் மேற்பட்ட மருந்து நிறுவனங்கள், மூன்றாவது கட்ட பரிசோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில்தான் நியூயார்க்கைச் சேர்ந்த ஃபைசர் நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 2,257 பேருக்கு கொரோனா.. சென்னையில் 'முதல் முறையாக' 600க்கு கீழே குறைந்த எண்ணிக்கை
90 சதவீதம் வெற்றி
அந்த நிறுவனம் நடத்திய மூன்றாவது கட்ட பரிசோதனையில், மருந்திலிருந்து 90 விழுக்காடு வெற்றி கிடைத்துள்ளதாக இன்று அறிவித்துள்ளது. அவசரகால பயன்பாட்டுக்காக இந்த மாதம் முதலே இதை பயன்படுத்துவதற்கு அமெரிக்க நிர்வாகத்திடம் அனுமதி கேட்க உள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. 16 முதல் 85 வயதுக்கு உட்பட்டோர் இடம் இந்த தடுப்பூசியை செலுத்தி பயன்படுத்துவதற்கு அனுமதி கேட்க உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித குலத்திற்கு சிறப்பான நாள்
இந்த மருந்து எவ்வளவு காலத்துக்கு கொரோனாவை தடுக்க பயன்படும் உள்ளிட்டவை பற்றி இன்னும் தகவல் வெளியாகவில்லை. இது பற்றி அந்த நிறுவனத்தின் தலைவர் ஆல்பர்ட் கூறுகையில், அறிவியல் மற்றும் மனித குலத்துக்கு இது ஒரு சிறப்பான நாள். எங்களது தடுப்பூசி தயாரிப்பு பணியின் முக்கியமான கட்டத்திற்கு வந்து சேர்த்துள்ளோம்.
பக்க விளைவுகள் இல்லை
உலகமே இந்த தடுப்பூசிக்காக ஏங்கும் இந்த காலகட்டத்தில், மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழியும் இந்த காலகட்டத்தில், பொருளாதாரம் பாதிப்படைந்துள்ள இந்த காலகட்டத்தில், எங்களின் தடுப்பூசி வெற்றி பெற்றுள்ளது என்று அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். இதுவரை 6 நாடுகளில், 43 ஆயிரத்து 500 பேருக்கு இந்த தடுப்பூசியை போட்டு பரிசோதனை செய்துள்ளோம். இந்த தடுப்பூசி காரணமாக பெரிய பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி செயல்படுவது எப்படி?
தடுப்பூசி வடிவத்தில் இந்த தடுப்பு மருந்து மனிதர்கள் உடலில் செலுத்தப்படும். உடலுக்குள் தடுப்புமருந்து சென்றபிறகு கொரோனா வைரஸ் ஸ்பைக் புரோட்டீன் உற்பத்தி செய்யும்படி உடலுக்கு அது கட்டளையிடும். இதையடுத்து உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்து டீ செல்களை ஆக்டிவேட் செய்து பாதிக்கப்பட்ட செல்களை அழிக்கும். மனிதனின் உடலில் கொரோனா வைரஸ் புகுந்தாலும் ஆன்டிபாடிகள் மற்றும் டி செல்கள் வைரஸை ஒழிப்பதற்கு தூண்டும்.