ஜி ஜின்பிங்கை மிரட்டிய டிரம்ப்.. மொத்த வரி 155 சதவீதமாக உயர்த்துவோம்.. சீனாவை சீண்டிய அமெரிக்கா
வாஷிங்டன்: அமெரிக்காவுடன், சீனா நியாயமான வர்த்தக ஒப்பந்தத்துக்கு முன்வர வேண்டும். இல்லாவிட்டால் நவம்பர் 1ம் தேதி முதல் கூடுதலாக 100 சதவீத வரி விதித்து மொத்த வரியை 155 சதவீதமாக அதிகரிப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை மிரட்டி உள்ளார். இந்த மிரட்டலின் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
அமெரிக்காவும், சீனாவும் வல்லரசு நாடுகளாக உள்ளன. இருநாடுகள் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. குறிப்பாக அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் இருநாடுகள் இடையேயான மோதல் வலுத்தது.

சீனாவை குறிவைத்து டொனால்ட் டிரம்ப் அதிரடியாக வரிகளை விதித்தார். மொத்த வரி 185 சதவீதமாக உயர்ந்தது. பதிலுக்கு சீனாவும், அமெரிக்காவுக்கு வரிகளை விதித்தது. அமெரிக்காவுக்கான வரியை சீனா 175 சதவீதமாக உயர்த்தியது.
இதனால் இருநாடுகள் இடையே வர்த்தக மோதல் உருவானது. அதன்பிறகு இருநாடுகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் டிரம்ப் 30 சதவீத வரிகளை மட்டுமே சீனாவுக்கு விதித்தார். மற்ற வரிகளை நிறுத்தி வைத்தார். அதேபோல் சீனாவும், அமெரிக்காவுக்கான வரியை நிறுத்தி வைத்தது. இப்படியான சூழலில் தான் மீண்டும் இருநாடுகள் இடையே வர்த்தக பதற்றம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இதுதொடர்பாக டொனால்ட் டிரம்ப் கூறியதாவது: சீனா எங்களை மிகவும் மதிக்கிறது என்று நான் நினைக்கிறேன். அவர்கள் வரி என்ற அடிப்படையில் எங்களுக்கு மிகப்பெரிய அளவில் பணம் செலுத்துகிறார்கள். இது உங்களுக்கு தெரியும். அவர்கள் 55 சதவீத வரியை எங்களுக்கு செலுத்துகிறார்கள். உண்மையில் அது நிறைய பணம். இப்போது கூடுதலாக 100 சதவீத வரியை விதிக்க இருக்கிறோம்.
அதன்படி சீனா மீதான மொத்த வரியை 155 சதவீதமாக நவம்பர் 1ம் தேதியில் உயர்த்த இருக்கிறோம். அதற்குள் எங்களிடம் ஒப்பந்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் 155 சதவீதம் வரை சீனா வரி செலுத்த வேண்டியிருக்கும் எங்களை பயன்படுத்தி கொண்ட பல நாடுகளுடன் நாங்கள் வர்த்தக ஒப்பந்தங்களை உருவாக்கி உள்ளோம். அதேபோல் சீனாவுடன் நியாயமான வர்த்தக ஒப்பந்த்தை உருவாக்குவோம் என்று நான் எதிர்பார்க்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
இதன்மூலம் டொனால்ட் டிரம்ப், மீண்டும் சீனாவை மிரட்டி உள்ளார். நவம்பர் 1ம் தேதிக்குள் சீனா, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் வரி 155 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று வார்னிங் செய்துள்ளார். டொனால்ட் டிரம்பை எடுத்து கொண்டால் வரி விதிப்பு முக்கிய ஆயுதமாக மாற்றி வைத்துள்ளார். அமெரிக்காவை எதிர்க்கும் நாடுகள், அமெரிக்காவின் கொள்கைக்கு உடன்படாத நாடுகளை குறிவைத்து வரிகளை தீட்டி வருகிறார். சீனா - அமெரிக்கா இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு உள்ளது.
மேலும் அமெரிக்காவை எடுத்து கொண்டால் அதன் சோயாபீன்ஸ் வர்த்தகத்துக்கு சீனா முக்கிய சந்தையாக உள்ளது. ஆனால் சீனா தொடர்ந்து அமெரிக்காவை புறக்கணித்து வருகிறது. செப்டம்பர் மாதத்தில் அமெரிக்காவிடம் இருந்து சோயாபீன்ஸை சீனா வாங்கவில்லை. அதுமட்டுமின்றி சீனாவிடம் இருந்து அமெரிக்காவுக்கு அரிய வகை கனிமங்கள் செல்கின்றன. இதற்கான ஏற்றுமதிக்கு சீனா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதனை டிரம்பால் ஏற்க முடியவில்லை. இதனால் சீனாவுக்கு ஏற்கனவே இருக்கும் 55 சதவீத வரியுடன் 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்தார். அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யாவிட்டால் சீனா மொத்தம் 155 சதவீத வரியை செலுத்த வேண்டியிருக்கும் என்று டிரம்ப் வார்னிங் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications