ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முடியாது.. திடீரென பல்டி அடிக்கும் எலான் மஸ்க்.. என்ன காரணம் தெரியுமா
வாஷிங்டன்: ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் எலான் மஸ்கின் டீல் விரைவில் முடியும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர் இது தொடர்பாக சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
உலகின் மிக முக்கிய சமூக வலைத்தளங்களில் ஒன்று ட்விட்டர். எதுவாக இருந்தாலும் சுருக்கமாக 140 எழுத்துகளில் சொல்ல வேண்டும் என்பதால் ட்விட்டர் உடனடியாக ஹிட் அடித்தது.
பிரபலங்கள் அனைவரும் தங்கள் படம் தொடங்கி பர்சனல் மேட்டர்கள் வரை அனைத்து அப்டேட்களை வழங்கும் ஒரு இடமாகவே ட்விட்டர் தளம் இருந்து வந்தது.

ட்விட்டர்
இப்படிப் பல சிறப்புகளைக் கொண்டிருந்தாலும் கூட, ட்விட்டர் நிதி விவகாரம் அந்நிறுவனத்தின் போர்ட் உறுப்பினர்களுக்குத் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. மற்ற சமூக வலைத்தளங்கள் உடன் ஒப்பிடுகையில் ட்விட்டர் தளத்தின் வளர்ச்சி சற்று மெதுவாகவே இருந்தது. ட்விட்டர் முதலீட்டாளர்களுக்கு முழு திருப்தி இல்லாமலேயே இருந்தது. இந்தச் சூழலில் தான், ட்விட்டர் தளத்தைத் தான் வாங்கத் தயாராக இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்தார்.
Recommended Video

எலான் மஸ்க்
அதன்படி ஒட்டுமொத்த ட்விட்டர் நிறுவனத்தை 44 மில்லியன் டாலருக்கு வாங்க இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்தார். அதாவது ஒரு ஷேரை சுமார் 54 டாலருக்கு எலான் மஸ்க் வாங்க இருந்தார். இந்த ஒப்பந்தம் விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில் , சில நாட்களுக்கு முன்பு, யாரும் எதிர்பார்க்காத வகையில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அதே ட்விட்டர் தளத்தில் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

போலிக் கணக்குகள்
இதற்கு முக்கிய காரணமாக அவர் சொன்னது போலிக் கணக்குகளின் எண்ணிக்கை. ட்விட்டர் தளத்தில் இருக்கும் கணக்குகளில் 5% மட்டுமே போலிக் கணக்குகள் என்பது ட்விட்டர் தளத்தின் வாதம். ஆனால், ஒட்டுமொத்த கணக்குகளில் குறைந்தது 20% போலிக் கணக்குகள் என்பது எலான் மஸ்க்கின் குற்றச்சாட்டு. இருப்பினும், தொடக்கத்தில் கூறியதை விட விடக் குறைந்த விலையில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கவே எலான் மஸ்க் இதுபோன்ற கருத்துகளைக் கூறி வருவதாகவும் கூறப்படுகிறது.

விலை அதிகம்
இதனிடையே சமீபத்தில் அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய எலான் மஸ்க், "ட்விட்டர் தளத்தைக் குறைந்த விலைக்கு வாங்குவது குறித்தும் ஆலோசித்து வருகிறேன். அவர்கள் கூறியதை விட மோசமாக இருக்கும் ஒன்றுக்கு எப்படி அதே விலையைக் கொடுக்க முடியும்" என்று கூறி இருந்தார். ட்விட்டர் நிறுவனத்தை முன்பு கூறியதை விடக் குறைந்த விலைக்கு எலான் மஸ்க் வாங்க விரும்புவதையே இது தெளிவாகக் காட்டுகிறது.

வாங்க முடியாது
இது தொடர்பாக அவர் மேலும் தனது ட்விட்டரில், "ட்விட்டரின் தகவல்கள் துல்லியமாக இருக்கும் என்பதை அடிப்படையாக வைத்தே நான் எனது ஆஃபரை வழங்கினேன். ஆனால், நேற்றைய தினம் போலிக் கணக்குகள் 5%க்கு குறைவாக தான் உள்ளது என்பதற்கான ஆதாரத்தை வெளியிட ட்விட்டர் சிஇஓ மறுத்துவிட்டார். அவர் அதை வெளிப்படையாக அறிவிக்கும் வரை ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் டீல் முன்னோக்கி நகராது" என்று தெரிவித்துள்ளார்.

போலி கணக்குகள்
ட்விட்டர் தளத்தில் பயனர்கள் தங்கள் உண்மையான அடையாளங்களைப் பயன்படுத்திப் பதிவு செய்யத் தேவையில்லை கட்டாயமில்லை என்பதால் போலிக் கணக்குகள் என்பது பெரும் பிரச்சினையாகவே உள்ளது. முன்பு ஒருமுறை கூட, போலி தளங்கள் மட்டுமே ட்விட்டர் தளத்தில் இருக்கும் ஒரே பிரச்சினை என்று எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். எனவே, மஸ்க் கைகளில் ட்விட்டர் வந்த உடன், போலிக் கணக்குகளை நீக்கி, போட்களை நீக்குவதே அவர் மேற்கொள்ளும் முதல் வேலையாக இருக்கும்.

சந்தேகம்
போலி மற்றும் ஸ்பேம் கணக்குகளை அகற்ற கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தினசரி சுமார் 5 லட்சம் ட்விட்டர் கணக்குகள் சந்தேகத்தின் அடிப்படையில் லாக் செய்யப்படுவதாகவும் ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வால் தெரிவித்திருந்தார். அதேபோல ட்விட்டர் தளத்தின் விதிகளும் தொடர்ச்சியாக அப்டேட் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications