கொஞ்சம் பாசிட்டிவ்.. ஏகப்பட்ட சர்ச்சைகள்.. டிரம்ப் 2.0இன் முதல் மாதம் எப்படி இருந்தது?
வாஷிங்டன்: அமெரிக்காவின் அதிபராகக் கடந்த ஜனவரி 21ம் தேதி டிரம்ப் பதவியேற்றார். இப்போது அவர் பதவிக்கு வந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. இந்த ஒரு மாதத்தில் அவரது நிர்வாகம் எப்படி இருந்தது.. இதில் டிரம்ப் சாதித்தது என்ன? அவரை சுற்றி எழுந்த சர்ச்சைகள் என்ன? இந்த நான்கு வார ஆட்சி டிரம்பிற்கு எப்படி இருந்தது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டிரம்ப் கடந்த ஜனவரி 21ம் தேதிதான் அதிகாரப்பூர்வமாகப் பதவிக்கு வந்தார். இந்த ஒரு மாதத்தில் அதிபர் டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அவை அமெரிக்காவைத் தாண்டி சர்வதேச அளவில் பரபரப்பைக் கிளப்புவதாகவே இருந்துள்ளது.

கிரீன்லாந்து
அமெரிக்க அதிபரான டிரம்ப் எடுத்த எடுப்பிலேயே கிரீன்லாந்தை வாங்கவுள்ளதாக அறிவித்தார். கிரீன்லாந்தின் நூக் தீவு அமெரிக்காவுக்கு மிக அருகே உள்ளது. கனிம, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்கள் நிறைந்து பகுதியாக கிரீன்லாந்து இருக்கிறது. அங்கு ரஷ்யாவின் ஆதிக்கம் அதிகரிக்கலாம் என்று டிரம்ப் நினைக்கிறார். இதனால் கிரீன்லாந்தை அமெரிக்காவுக்கு விற்க வேண்டும் எனத் தடாலடியாக அறிவித்தார். இது சர்வதேச அளவில் பேசுபொருள் ஆனது. தொடக்கத்தில் அதிரடியாக இது குறித்து பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.
நாடு கடத்தல்
அடுத்து டிரம்ப் எடுத்த முக்கிய நடவடிக்கைகளில் ஒன்று நாடு கடத்தல். அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தோரை நாடு கடத்த டிரம்ப் உத்தரவிட்டார். சட்டவிரோதமாக இருப்போர் நாடு கடத்தப்படுவது வழக்கமான நடைமுறை தான். ஆனால், டிரம்ப் அந்த நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த உத்தரவிட்டார். இதால் 4 வாரங்களில் பல நூறு பேர் நாடுகடத்தப்பட்டனர். இந்தியாவுக்குக் கூட இதுவரை இரு விமானங்களில் நாடுகடத்தப்பட்டுள்ளனர். அதேநேரம் அவர்கள் கை கால்கள் விலங்கிடப்பட்டு, ராணுவ விமானத்தில் மோசமான முறையில் நாடுகடத்தப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியது.
சர்வதேச நிதி
டிரம்ப் வீசிய அடுத்த வெடி USAID நிதியை நிறுத்தியது. USAID என்பது சர்வதேச வளர்ச்சிக்கு அமெரிக்கா வழங்கும் நிதியாகும். இதில் பல்வேறு நாடுகளுக்கும் அமெரிக்கா சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால், இந்த நிதியால் அமெரிக்காவுக்கு எந்தவொரு லாபமும் இல்லை எனச் சொல்லி டிரம்ப் இதை மொத்தமாக நிறுத்திவிட்டார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
அடுத்து முக்கியமானது வரி தொடர்பானது. முதலில் எடுத்தவுடனேயே கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளின் இறக்குமதிக்கு 25% வரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டார். மேலும், சீனாவின் இறக்குமதிகளுக்கு ஏற்கனவே தற்போதுள்ள வரிகளுடன் சேர்த்துக் கூடுதலாக 10% வரி விதிக்கப் போவதாக டிரம்ப் அறிவித்தார். இது மட்டுமின்றி ஸ்டீல் மற்றும் அலுமினியம் இறக்குமதிக்கு 25% வரி விதிப்பதாக அறிவித்தார்.
ரெசிப்ரோகல் வரி
ஆனால், டிரம்ப் இத்துடன் நிற்கவில்லை.. கடைசியாக ஒரு பெரிய குண்டை போட்டார். அதாவது ரெசிப்ரோகல் வரியை விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார். அதாவது எந்தெந்த நாடுகள் அமெரிக்கா மீது எவ்வளவு சதவிகிதம் வரி விதிக்கிறதோ.. அதே அளவுக்கு அந்த நாடுகள் மீது வரி விதிக்கப் போவதாக டிரம்ப் அறிவித்தார். இதன் மூலம் இந்தியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் வரி சுமை அதிகரிக்கும்.
இதுபோல டிரம்ப் அடுத்தடுத்து சர்ச்சைகளைக் கிளப்பினார். இது ஒரு பக்கம் இருந்தாலும் டிரம்ப் எடுத்த சில முடிவுகள் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. அதில் ஒன்று போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் அவர் காட்டிய ஆர்வம். டிரம்ப் அதிபராகப் பதவியேற்க சில நாட்கள் இருந்த போது தான் இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் கையெழுத்தானது. இதில் டிரம்பிற்கு முக்கிய பங்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதேபோல உக்ரைனில் மோதல் விவகாரத்தில் அவரது முயற்சியாலேயே பேச்சுவார்த்தை ஆரம்பித்துள்ளது. ஆனால், அதிலும் கூட உக்ரைனை அவர் விமர்சிப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடரும் சர்ச்சை
இது தவிர பிரிக்ஸ் அமைப்பு குறித்து அவரது கருத்து, பெடரல் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டம், எலான் மஸ்க் உடனான நெருக்கம் என்றே டிரம்ப் அரசு இருக்கிறது. சில நல்ல விஷயங்கள் பல சர்ச்சைகள் என்று டிரம்ப்பின் டிரேட் மார்க் உடன் தான் இந்த ஒரு மாத கால ஆட்சி இருந்தது. அடுத்து வரும் காலங்களிலும் டிரம்ப் ஆட்சி இதேபோலத் தான் இருக்கும் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications