திடீரென நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள்.. டிரம்ப் வந்ததும் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு சிக்கல்?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவுள்ள டிரம்ப், இந்த முறை சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுப்பார் எனத் தெரிகிறது. இதற்கிடையே கடந்த ஓராண்டில் அமெரிக்காவில் இருந்து நாடு நடத்தப்பட்ட இந்தியர்கள் குறித்த விவரங்களை மத்திய அரசு இப்போது நாடாளுமன்றத்தில் பகிர்ந்துள்ளது. டிரம்ப் இந்த நடவடிக்கையில் தீவிரம் காட்டுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வரும் காலத்தில் இதுபோன்ற நடவடிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
அமெரிக்க அதிபராகப் பதவியேற்கும் டிரம்ப் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்குவதை ரத்து செய்யப் போவதாகக் கூறியிருந்தார்.

இது அங்குள்ள இந்தியர்கள் உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டினரையும் அச்சத்தில் ஆழ்த்தியிருந்தது. இதற்கிடையே இந்தாண்டு அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் குறித்த விவரங்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பகிர்ந்துள்ளது.
மத்திய அரசு: கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 519 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உரிய அங்கீகாரம் அல்லது அனுமதி இல்லாமல் அமெரிக்காவில் தங்கியதாகக் கூறி இவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மாலா ராய் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பி இருந்தார். அந்த கேள்விக்குப் பதிலளித்த வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் ஆசாத், "ஓராண்டில் மட்டும் மொத்தம் 519 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பான தரவுகளை அமெரிக்கா எங்களிடம் பகிர்ந்துள்ளது. அதன்படி கடந்தாண்டு நவம்பர் முதல் இந்த அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் 519 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் சிறப்பு மற்றும் வழக்கமான விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர்" என்றார்.
எதற்காக: நாடு கடத்தப்பட்ட இந்தியர்களில் எத்தனை ஆண்கள், எத்தனை பெண்கள் என்பது குறித்த விவரங்கள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், அவர்கள் எதற்காக அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர் என்று கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் ஆசாத், "அமெரிக்காவில் சட்டப்பூர்வமாகத் தங்க அனுமதி இல்லாதவர்களை அடையாளம் கண்டு அவர்களை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை நாடு கடத்தும் பணிகளை வழக்கமாக மேற்கொள்ளும். இந்த விவகாரத்தில் இந்தியா- அமெரிக்க இடையே உள்ள ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகச் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தவர்கள் நாடு கடத்தப்பட்டனர்" என்று பதிலளித்தார்.
பகிரவில்லை: அதேநேரம் எந்த சட்டம் அல்லது விதியின் அடிப்படையில் இந்தியர்கள் சட்டவிரோதமாகத் தங்கியவர்களை என்று அறிவிக்கப்பட்டது என்பது குறித்த விவகாரங்களை அமைச்சர் பகிரவில்லை. அதேபோல நாடு கடத்தப்பட்டவர்களில் எத்தனை பேர் ஆண்கள், எத்தனை பேர் பெண்கள் என்பது குறித்த விவரங்களையும் மத்திய அமைச்சர் பகிரவில்லை.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டிரம்ப் அடுத்தாண்டு தொடக்கத்தில் அதிபராகப் பதவியேற்கிறார். இந்த முறை அவர் பிரச்சாரத்தின் போதே சட்டவிரோத குடியேற்றம் குறித்து காட்டமான கருத்துகளைத் தெரிவித்து இருந்தார். இதன் காரணமாகவே அமெரிக்கர்களுக்குக் கிடைப்பதில்லை என்றும் சட்டவிரோதமாக குடியேறுவோரைத் தடுத்துவிட்டால் அமெரிக்கர்களுக்கு அதிக வேலை கிடைக்கும் என்பது அவரது வாதம்.
இந்தியர்களுக்கு சிக்கல்? அடுத்தாண்டு ஜனவரி மாதம் அவர் அதிபராகப் பதவியேற்கும் நிலையில், அதன் பிறகு இதுபோன்ற நடவடிக்கையுள் மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்குவதை ரத்து செய்ய உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், இவை எல்லாம் அங்குள்ள இந்தியர்களுக்குச் சிக்கல்களையே ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications