இது ரொம்ப தப்புங்க... அப்போ கொரோனா பரவலை யாராலும் தடுக்க முடியாது... ரஷ்யாவை எச்சரிக்கும் அமெரிக்கா
வாஷிங்டன்: அமெரிக்கா நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசி குறித்து பரப்பப்படும் போலி செய்திகள் பின்னணியில் ரஷ்யா உள்ளதாகவும் இதை உடனடியாக ரஷ்யா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகளும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போதைய சூழ்நிலையில் தடுப்பூசி மட்டுமே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒரே வழியாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் பைசர், மாடர்னா, பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி, ரஷ்யாவின் ஸ்புட்னிட் வி தடுப்பூசிகளே தற்போது வரை உலக நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக பைசர் தடுப்பூசியே பெரும்பாலான நாடுகளில் தற்போது பயன்படுத்தப்படுகிறது.
அமெரிக்கா, பிரேசிலில் அதிகரிக்கும் கொரோனா.. உலகம் முழுக்க ஒரே நாளில் 362,209 பேர் பாதிப்பு.. பின்னணி
கொரோனா தடுப்பூசி
இருப்பினும், பல்வேறு நாடுகளிலும் கொரோனா தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளப் பொதுமக்கள் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றனர். கொரோனா தடுப்பூசி குறித்து தொடர்ந்து போலியான செய்திகள் பரவி வருவதே இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்பட்டது. இதைத் தாண்டி பொதுமக்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்வதை ஊக்கப்படுத்த பல்வேறு உலக தலைவர்களும் தடுப்பூசியை எடுத்து, நம்பிக்கையை அதிகப்படுத்தினர்.
போலி செய்திகள்
இந்நிலையில், அமெரிக்காவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகள் குறித்து ராஷ்யா தொடர்ந்து போலியான செய்திகளைப் பரப்புவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது. ரஷ்ய உளவு துறையின் ஆலோசனைப்படி மூன்று நிறுவனங்கள் தொடர்ந்து அமெரிக்காவின் பைசர் மற்றும் மாடர்னா கொரோனா தடுப்பூசிகள் குறித்து தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ள தயங்குவதாகவும் போலி செய்திகளைப் பரப்புவதை ரஷ்யா உடனடியாக நிறுத்திக் கொள்ளவில்லை என்றால் கொரோனா பரவல் மோசமாக இருக்கும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது
பின்னணியில் ரஷ்யா
அந்த மூன்று ஆன்லைன் நிறுவனங்களும் அமெரிக்க நிறுவனங்களின் தடுப்பூசிகள், சர்வதேச அமைப்புகள், சர்வதேச ராணுவ சிக்கல்கள், போராட்டங்கள் ஆகியவற்றில் அமெரிக்காவின் நிலைப்பாடுகள் குறித்து தொடர்ந்து தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் அமெரிக்கா வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், ரஷ்யாவின் இந்த முயற்சியை முறியடிக்க தேவையான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காரணம் என்ன
ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியைப் பிரபலப்படுத்தும் நோக்கிலும் அமெரிக்கா தடுப்பூசிகளை மக்கள் பயன்படுத்தக்கூடாது என்ற நோக்கிலும் ரஷ்யா இப்படிச் செயல்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். மற்ற நிறுவனங்களுக்கு எல்லாம் முன் ரஷ்யா தனது ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்குக் கடந்த ஆகஸ்ட் மாதமே ஒப்புதல் அளித்தது. இருப்பினும், அப்போது மருத்துவ சோதனை முடிவுகள் வெளியாககதால் அதைப் பயன்படுத்த உலக நாடுகள் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், இப்போது ஸ்புட்னிக் வி தடுப்பூசி 92% பலன் அளிப்பது தெரியவந்துள்ளதால், பல நாடுகளும் ரஷ்யாவிடம் தடுப்பூசி கோரியுள்ளன.