"உலகத்தையே மாற்றும் ஜாக்கிரதை.." உக்ரைனிடம், ரஷ்யா வாலாட்டினால் அமெரிக்கா விடாது: உக்கிரமான ஜோ பிடன்
வாஷிங்டன்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு நிறுத்தப்படாவிட்டால் அது உலகத்தையே மாற்றும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
ரஷ்யாவுக்கும் உக்ரைன் நாட்டுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை நீடித்து வருகிறது. 2014 ஆம் ஆண்டில் உக்ரேனியர்கள் ரஷ்ய சார்பு அதிபரை பதவி நீக்கம் செய்தனர்.
இதையடுத்து உக்ரைனின் தெற்கு கிரிமியா தீபகற்பத்தை கைப்பற்றி தங்கள் நாட்டின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது ரஷ்யா. இதனையடுத்து கடந்த சில மாதங்களாக உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.
சோவியத் யூனியன்
ரஷ்யா மற்றும் உக்ரைன் சோவியத் யூனியனின் அங்கமாக இருந்தன. அதன்பிறகு 1991-ல் உக்ரைன் தனி நாடாக பிரிந்தது. உக்ரைன் தனிநாடான பின்னரும், அதன்மீது தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது ரஷ்யா. இதுதான் இரு நாடுகளுக்கும் இடையே பிரச்னைகளுக்குக் காரணமாக அமைந்தது. இதையடுத்து உக்ரைன் நாடு NATO-வில் இணைய திட்டமிட்டுள்ளது. இது ரஷ்யாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
படைகள்
கடந்த சில மாதங்களாக உக்ரைன்-ரஷ்ய எல்லையில் பதற்றம் நீடித்துவருகிறது. இந்நிலையில், உக்ரைன் எல்லையில் சுமார் ஒரு லட்சம் வீரர்களைக் குவித்திருக்கிறது ரஷ்யா. உயர் ரக பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் எல்லையில் நிறுத்தி இருக்கிறது ரஷ்யா. உக்ரைன் எல்லையில் ரஷ்ய ராணுவ வீரர்கள் தீவிர ராணுவப் பயிற்சிகளில் ஈடுபட்டிருப்பது எல்லைப் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது.
அமெரிக்கா
உக்ரைன் மீது படையெடுத்தால் ரஷ்யா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சமீபத்தில் பகிரங்கமாக ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்தார். மேலும் அந்நாட்டின் மீது மிகப்பெரிய அளவுக்கு பொருளாதார தடை விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார். NATO படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என்பது ரஷ்ய அதிபர் புட்டினின் வாதமாக இருக்கிறது.
Recommended Video
உலகத்தையே மாற்றும்
உக்ரைன் மீதான படையெடுப்புடன் ரஷ்யா முன்னேறினால், அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை தனிப்பட்ட முறையில் குறிவைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், ரஷ்ய படைகள் பின்வாங்காவிட்டால் "உலகத்தை மாற்றும்" என்று எச்சரித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். இதையடுத்து, ரஷ்ய அச்சுறுத்தலை எதிர்கொள்ள உக்ரைனுக்கு பக்கதுணையாக இருக்க படைகளை அனுப்ப அமெரிக்காவும் தயாராகி வருகிறது. முதற்கட்டமாக அமெரிக்கா 5,000 வீரர்களை கிழக்கு ஐரோப்பாவுக்கு அமெரிக்கா அனுப்பி வைக்கும் என தெரியவந்துள்ளது.