அதிக தடுப்பூசி போட்ட நாடுகளிலும் கொரோனா வேகமாக பரவுவது ஏன்?
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் உலகின் பெரும்பகுதியில் பரவி 15 மாதங்களாகிவிட்டது. ஆனால் இந்த, தொற்றுநோய் இன்னும் தீவிரமாக உள்ளது. உலகம் முழுக்க 3 பில்லியன் தடுப்பூசி டோஸ்கள் ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் மிக எளிதாக பரவும் சூப்பர்-டிரான்ஸ்மிசிபிள் வகைகளாக உருவெடுத்துள்ளது.
உருமாறிய கொரோனா வைரஸ்தான், எதிர் வரும் காலங்கள் எப்படி இருக்கும் என்பதை நிர்ணயிக்கப் போகின்றன.
தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு பிறகு குறைந்த தினசரி வைரஸ் பாதிப்பு.. 26 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை
அதேநேரம், உருமாறிய கொரோனாக்களை தடுப்பூசிகள் வென்று வீழ்த்தி வருகின்றன என்பது மிக முக்கிய தகவலாகும்.
தடுப்பூசி பங்கு
தடுப்பூசி போடப்பட்ட நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அதன் பாதிப்பு குறைவாக இருக்கிறது. ஆனால் தடுப்பூசி போடப்படாதவர்களுக்கு உருமாறிய வைரஸ் பாதிப்பு கூடுதலாக பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது. மேலும் தடுப்பூசி போடாதவர்கள் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகும் போது அதை ஏற்கனவே தடுப்பூசி போட்டவர்களுக்கும் பரப்பி விட்டு விடுகிறார்கள்.
இங்கிலாந்து
இங்கிலாந்தில் இப்படித்தான் நடைபெற்று வருகிறது. அங்கு நோய் பரவல் அதிகரிப்பதற்கு காரணம் தடுப்பூசியின் தோல்வி கிடையாது. ஆனால், தடுப்பூசி போடப்படாத நபர்கள் மத்தியில் புதிய உருமாறிய வைரஸ் வேகமாக பரவி வருவது தான் காரணம் என்கிறார்கள் வல்லுநர்கள். இந்த உலகத்தில் ஒவ்வொருவரும் பாதுகாப்பாக மாறும்வரை, யார் ஒருவரும் பாதுகாப்பாக இல்லை என்பதுதான் உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கையாக இருக்கிறது.
முதல் முறை
ஆல்ஃபா (பி .1.1.7 என்றும் அழைக்கப்படுகிறது) வைரஸ்தான் முதல்முறை தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டபோது பெரும்பாலும் அறியப்பட்ட வைரசாக இருந்தது. ஃபைசர்-பயோஎன்டெக் மற்றும் மாடர்னாவின் தடுப்பூசிகள் நோய்த்தொற்றுகளின் அபாயத்தை 90 சதவிகிதத்திற்கும் அதிகமாகக் குறைக்கின்றன. ஜூன் 21 நிலவரப்படி, CDC முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட மக்களிடையே வெறும் 3,907 பேர்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 750 பேர் மட்டும் இறந்ததாக தெரிவித்தது. டெல்டா உருமாறிய வைரஸ் (பி .1.617.2 என்றும் அழைக்கப்படுகிறது) ஆல்பாவை விட 35 முதல் 60 சதவிகிதம் அதிகமாக பரவுகிறது. இது இப்போது அமெரிக்காவில் 26 சதவீத புதிய தொற்றுகளை ஏற்படுத்துகிறது.
தடுப்பூசி செயல்பாட்டுத் திறன்
இங்கிலாந்தின் ஆய்வின்படி, இரண்டு டோஸ் ஃபைசர் தடுப்பூசி டெல்டா நோய்த்தொற்றுகளைத் தடுப்பதில் 88 சதவிகிதம் பயனுள்ளதாக இருக்கும், மேலும் 96 சதவிகிதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதைத் தடுக்கிறது. (ஒற்றை டோஸ், அறிகுறி நோய்த்தொற்றை நிறுத்துவதில் 33 சதவீதம் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்.)
இஸ்ரேல் நிலவரம்
அதிக தடுப்பூசி போடப்பட்ட இஸ்ரேல், சிறிய அளவுக்கு டெல்டா கொரோனா பரவல் பிரச்சினையை அனுபவித்து வருகிறது, ஆனால் இதுவரை, புதிய கேஸ்கள் எதுவும் கடுமையாக இல்லை. புதிய கேஸ்கள் சுமார் 30 சதவிகிதம் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட மக்களில் ஏற்பட்டுள்ளது. ஆனால், கடுமையான பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது நாட்டின் தடுப்பூசி வெற்றியை பிரதிபலிக்கிறது. பெர்ன் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் எம்மா ஹாட்கிராஃப்ட், ஹார்வர் தொற்றுநோயியல் நிபுணர் பில் ஹனகே ஆகியோர் கூறுகையில், "நாம் உண்மையில் புரிந்து கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான கேள்வி, நோய் பரவும் தன்மை" என்கிறார்கள்.
இந்திய தடுப்பூசி
இந்தியாவில் அஸ்ட்ராஜெனெகாவின், கோவிஷீல்ட் தடுப்பூசி இரு டோஸ் போடப்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் டெல்டாவால் பாதிக்கப்பட்டாலும் அதை கடந்து சென்றனர். "தடுப்பூசி போடப்பட்டவர்கள் நோய்வாய்ப்பட்டு அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் நுழைந்தால், என்ன நடக்கிறது என்பதைப் பற்றி எங்களுக்கு ஒரு நல்ல சித்திரம் கிடைக்கும்" என்று ஹார்வர்ட் மருத்துவப் பள்ளி மற்றும் பாஸ்டன் குழந்தைகள் மருத்துவமனையின் தொற்றுநோயியல் நிபுணர் மாயா மஜும்தர் கூறியுள்ளார். தொற்றுநோயின் தொடக்கத்தில் இருந்ததைப் போல நாங்கள் பாதிக்கப்பட வாய்ப்பில்லை. தடுப்பூசிகள் பலவிதமான பாதுகாப்பு ஆன்டிபாடிகள் மற்றும் நோயெதிர்ப்பு உயிரணுக்களைத் தூண்டுகின்றன, எனவே உருமாறிய வைரஸ் அவற்றைத் தவிர்ப்பது கடினம். இந்த பாதுகாப்புகள் நபருக்கு நபர் கொஞ்சம் வேண்டுமானால் மாறுபடும். திடீரென்று ஒரு உருமாறிய கொரோனா எல்லாவற்றையும் பொடிப் பொடியாக்கிவிடும் என்று நான் நினைக்கவில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
Recommended Video
பூஸ்டர் ஷாட்கள்
அது நடந்தால், தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு பூஸ்டர் ஷாட்கள் தேவைப்படலாம். அவை கிடைப்பதில் சிக்கல் இருக்க கூடாது. "தடுப்பூசிகளை உற்பத்தி செய்யக்கூடிய நாடுகள் தங்கள் சொந்த மக்களுக்காக மட்டும் பூஸ்டர்களை உற்பத்தி செய்யும் என்று நான் கவலைப்படுகிறேன், மேலும் உலகெங்கிலும் உள்ள தடுப்பூசி ஏற்றத்தாழ்வு இன்னும் அதிகமாகிவிடும்" என்று WHO தொற்றுநோயியல் நிபுணர் மரியா வான் கெர்கோவ், கூறுகிறார்.
எச்சரிக்கை அவசியம்
அதிக தடுப்பூசி போடப்பட்ட நாடுகள் கூட மெத்தனமாக இருக்கக் கூடாது. கொரோனாவை கட்டுப்படுத்தக்கூடிய மற்ற நடவடிக்கைகளில் முதலீடு செய்ய வேண்டும். ஆனால் போதுமான அளவு அவ்வாறு பணிகள் நடைபெறவில்லை. பரவலான விரைவான சோதனைகள், சிறந்த தொடர்பு தடமறிதல், முகக் கவசங்கள், நோய்வாய்ப்பட்ட மக்கள் தனிமைப்படுத்தக்கூடிய இடங்கள் மற்றும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு போன்ற நடவடிக்கைகளை எடுக்க அவை தயாராக இருக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் தடுப்பூசி போடப்படாத சமூகங்களிடையே வைரஸ் பரவுவதைக் குறைக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள்.