கத்தாரில் ஹேண்ட்பேக்கை பறிகொடுத்த பெண் பத்திரிக்கையாளர்.. போலீஸ் அளித்த பதிலை கேட்டு ஷாக்!
வாஷிங்டன்: கத்தாரில் பிபா உலக கோப்பை போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், அது தொடர்பாக செய்தியை வழங்கிய பெண் பத்திரிகையாளரின் ஹேண்ட் பேக் திருடு போய் உள்ளது. இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீஸ் நிலையம் சென்ற அந்த பத்திரிகையாளருக்கு போலீஸ் அளித்த பதில் மேஎலும் ஷாக் கொடுத்துள்ளது.
உலக கோப்பை பிபா கால்பந்து தொடர் கத்தாரில் நடைபெற்று வருகிறது.
கத்தாரில் நடைபெற்று வரும் இந்த உலகக் கோப்பையை போட்டித்தொடரை காண கத்தாரில் கால்பந்து ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

ஹேண்ட் பேக் திருடு..
அதேபோல், கால்பந்து போட்டி தொடர்பாக செய்திகளை சேகரிக்கவும் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் பலரும் கத்தாரை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் அர்ஜெண்டினாவை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் நேரலையில் செய்திகளை வழங்கிக் கொண்டு இருந்த போது தனது ஹேண்ட் பேக் திருடு போய் விட்டதாக புகார் அளித்துள்ளார்.

வியக்க வைத்த போலீசின் பதில்
அர்ஜெண்டினாவை சேர்ந்த டொமினிக் மெட்ஜெர் என்ற பத்திரிகையாளர் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால், கத்தார் போலீசார் அளித்த பதில் தன்னை வியக்க வைத்ததாக டொமினிக் மெட்ஜெர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டொமினிக் மெட்ஜெர் கூறுகையில், "நாN போலீஸ் நிலையத்திற்கு சென்றேன். கலாச்சார வேறுபாடு அப்போதே தொடங்கி விட்டது. அங்கு இருந்த போலீஸ் என்னிடம் கூறுகையில், "எங்களிடம் ஹைடெக் கேமரா உள்ளது. அனைத்து இடங்களிலும் இந்த கேமரா இருக்கிறது.

என்ன தண்டனை கொடுக்கனும்..
எளிதில் திருடனை கண்டுபிடித்து விடுவோம். திருடனை கண்டுபிடித்தவுடன் எந்த மாதிரியான நீதி வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? என்று கேட்டுள்ளனர். இதனால், சற்று திகைத்த மெட்ஜெர் கொஞ்சம் விளக்கமாக கூறுங்கள் என்று கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த போலீஸ் அதிகாரி, "உங்களுக்கு எந்த மாதிரியான நீதி கிடைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? திருடிய நபருக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும்?

நாடு கடத்தப்பட வேண்டுமா?
5 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்க வேண்டுமா? அல்லது நாடு கடத்தப்பட வேண்டுமா? என்று கேட்டுள்ளார். என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை போலீசாரே கேட்டதை பார்த்து திகைத்து போன மெட்ஜெர், தொலைந்து போன பொருட்களை மட்டும் மீட்டு கொடுத்தால் போதும்? என்று சொல்லியிருக்கிறார். போலீஸ் நிலையத்தில் தனக்கு கிடைத்த இந்த அனுபவத்தை தொலைக்காட்சியில் மெட்ஜெர் பகிர்ந்து இருக்கிறார்.

நேரலையில் நான் செய்தி வழங்கிய போது
அப்போது மெட்ஜெர் கூறுகையில், "எனது பை மட்டும் திருடுபோனது. நேரலையில் நான் செய்தி வழங்கிய போது இது நடைபெற்று விட்டது. புகாரை பதிவு செய்ய போலீசார் என்னை இங்கு அனுப்பினர். பையில் இருந்த ஆவணங்களும் கார்டுகள் குறித்து மட்டுமே நான் கவலைப்பட்டேன். பேக்கில் இருந்த பிற பொருட்கள் பற்றி எனக்கு கவலை இல்லை. எனவே, என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று பார்ப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

அனுபவம் இல்லாதவர்கள் பாதுகாப்பு பணியில்
உலக கோப்பை போட்டியை நடத்தி வரும் கத்தாரில் பாதுகாப்பு விவகாரம் அதிகம் பேசப்படும் ஒன்றாக உள்ளது. உலக கோப்பை போட்டிகளுக்கான கத்தார் போட்டி பாதுகாப்பு குழு நூற்றுக்கணக்கான பணியாளர்களை வேலையில் அமர்த்தியுள்ளது. இதில் பெரும்பாலானோர் போதிய அனுபவம் இல்லாதவர்கள் என்றும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications