இந்தியாவை அவமானப்படுத்திய டிரம்ப்.. கொதித்தெழுந்த வெளியுறவுத்துறை.. சீண்டலின் பின்னணி
டெல்லி: இந்தியாவை அவமானப்படுத்தும் வகையில் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவு சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதனால் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கொதித்தெழுந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவில் மீண்டும் பிரச்சனை வரும் நிலை உருவாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எப்போது எந்த மனநிலையில் இருக்கிறார்? என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. திடீரென்று ஒரு நாட்டை புகழ்வதும், மறுநாளே அந்த நாட்டுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளது. டிரம்பின் இந்த செயல் நம் இந்தியாவுக்கும் பொருந்தும்.

''இந்தியாவை போன்ற நல்ல நட்பு நாடு எதுவுமில்லை. பிரதமர் மோடி போல் நல்ல நண்பர்'' என புகழும் டிரம்ப் அதன்பிறகு நம் நாட்டை சீண்டும் வகையில் கருத்து தெரிவித்து வருவதை நாம் இதற்கு முன்பு பலமுறை பார்த்து இருப்போம். அந்த வகையில் தற்போது டொனால்ட் டிரம்ப் மீண்டும் நம் நாட்டை அவமானப்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளார்.
அதாவது அமெரிக்காவில் போட்காஸ்டராக இருக்கும் மைக்கேல் சேவேஜ் என்பவர் தனது வலைதள பக்கத்தில், ''இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் Hell Holes'' என்று பதிவிட்டு இருந்தார். Hell Holes என்பது மிகவும் மோசமான/நரகமான இடங்கள் என்பதை குறிக்கும். குறிப்பாக சுகாதார வசதி, அடிப்படை வசதிகள் இல்லாத இடம் என பொருள்படும்.
இந்த போட்காஸ்டரின் பதிவை டொனால்ட் டிரம்ப் தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்தார். இதன்மூலம் நம் நாட்டையும், சீனாவையும் அவமானப்படுத்தினார். டிரம்பின் இந்த செயல் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து நம் நாட்டுக்கான அமெரிக்க தூதரகம் சார்பில் நிலைமையை சமாளிக்க அறிக்கை விடப்பட்டது. அதில், ''இந்தியா ஒரு சிறந்த நாடு என்றும், தன்னுடன் நல்ல நட்பாக இருக்கும் தலைசிறந்த நபர் இந்தியாவை வழிநடத்துகிறார் என்றும் டிரம்ப் கூறி வருகிறார்'' என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இருப்பினும் நம் நாடு சமாதானம் அடையவில்லை. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனத்தை தெரிவித்தது. வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்தியா - அமெரிக்கா இடையே பரஸ்பர மரியாதை, நலன்களை அடிப்படையாக கொண்ட நீண்டகால உறவு உள்ளது. இந்த உறவுக்கு தற்போதைய கருத்து முரணாக உள்ளது. இந்த கருத்து பொருத்தமானதாக இல்லை. அதோடு மோசமான ரசனையுடன் பதிவிடப்பட்ட கருத்தாக இருக்கிறது. அதோடு இந்த கருத்து இந்தியா - அமெரிக்கா இடையேயான எதார்த்தமான உறவை பிரதிபலிக்கும் வகையில் இல்லை'' என கூறப்பட்டுள்ளது.
அதேபோல் டொனால்ட் டிரம்பின் இந்த கருத்துக்கு இந்து அமெரிக்க அமைப்பு (Hindu American Foundation) கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி அந்த அமைப்பு, ''இந்திய மற்றும் சீன அமெரிக்கர்களை இலக்காகக் கொண்ட இந்த வெறுப்பு, இனவெறி சார்ந்த பதிவை அமெரிக்க அதிபர் பகிர்ந்து கலக்கமடைய செய்துள்ளார். இப்போது வெளிநாட்டினர் மீதான வெறுப்பு மற்றும் இனவெறி அதிகரித்துள்ளது. இப்படியான சூழலில் அமெரிக்கா அதிபராக ஒருவரின் மோசமான கருத்துக்கு அங்கீகாரம் அளிப்பது என்பது மேலும் வெறுப்பையும், ஆபத்தையும் உருவாக்கும். உடனடியாக இந்த பதிவை நீக்கி ஆசியா - அமெரி்கர்களின் ஈடு இணையற்ற பங்களிப்புகளை டிரம்ப் அங்கீகரிக்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications