டோங்கோ எரிமலை வெடிப்பு நூற்றுக்கணக்கான ஹிரோஷிமா குண்டு வெடிப்புக்கு சமமானது.. நாசா பகீர் தகவல்
வாஷிங்டன்: டோங்கோ எரிமலை வெடிப்பு நூற்றுக்கணக்கான ஹிரோஷிமா குண்டு வெடிப்புக்கு சமமானது என்று நாசா தெரிவித்துள்ளது. தென் பசிபிக் கடலில் அமைந்திருக்கும் சிறிய அளவிலான பகுதிதான் டோங்கோ. 170-க்கும் மேற்பட்ட சிறு, சிறு தீவு கூட்டங்களை உள்ளடக்கிய பகுதியான டோங்கோவில் சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.
அதிமான பழங்குடியின மக்கள் வசிக்கும் டோங்கோ ஒரு அழகிய பிரதேசமாகும். ஆனால் இந்த அழகிய பிரதேசம்தான் இப்போது அங்கு மட்டுமில்லாது உலகம் முழுவதுதற்கும் ஆபத்தான பிரதேசமாக மாறியுள்ளது. டோங்கோ தீவுகளில் ஏராளமான எரிமலைகளும் உள்ளன. இந்த எரிமலைகள் அடிக்கடி வெடிப்பது வழக்கம்.
துண்டு துண்டுகளாக சிதறிய தீவுகள்.. எரிமலை வெடிப்பால் சின்னாபின்னமான டோங்கோ..புதிய சாட்டிலைட் படங்கள்
சுனாமி அலைகள் தாக்கின
சில நாட்களுக்கு முன்பு டோங்கோவில் ஒரு தீவுக்கு அருகே கடலில் உள்ள எரிமலை திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் டோங்கோ பகுதிகளில் சுனாமி அலைகள் கடுமையாக தாக்கின. தலைநகர் நுகு அலோபா நகரின் பெரும்பாலான பகுதிகளில் பல அடி உயரத்தில் சுனாமி அலைகள் புகுந்தன. சுனாமிப் பேரலை தாக்கிய படு பயங்கர காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகின.
சாம்பல் திட்டுகளால் மூடப்பட்ட டோங்கோ
ராட்சத சுனாமி அலைகளில் சிக்கிக்கொண்ட மக்கள் தங்கள் உடமைகளையும் வீடுகளையும் இழந்தனர். டோங்கோவின் பல தீவுகள் கடலில் மூழ்கி விட்டதாக கூறப்படுகிறது. இது தவிர டோங்கோ முழுவதுமே சாம்பல் திட்டுகளால் மூடப்பட்டுள்ளது. முழுவதும் சாம்பல் உள்ளதால் மக்கள் குடிநீர் கூட இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். வளிமண்டல காற்றிலும் சாம்பல் கலந்துள்ளதால் உதவிக்காக செல்லும் விமானங்களும் தடுமாறுகின்றன.
மிகப்பெரிய பேரழிவு
டோங்கோவின் நிலை என்ன என்பதை இப்போது வரை முழுமையாக கண்டறிய முடியவில்லை. டோங்கோ தீவிலிருந்து பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பகுதிகளிலும் எரிமலை வெடிப்பு அதிர்வுகள் உணரப்பட்டது. சென்னை, கேரளாவின் திருவனந்தபுரம் வரையிலும் அதன் வளிமண்டல அதிர்வுகள் உணரப்பட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. டோங்கோ எரிமலை வெடிப்பின் பாதிப்பு வருங்காலங்களில் வானிலை மாற்றங்களை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நூற்றுக்கணக்கான ஹிரோஷிமாக்களுக்கு சமம்
இந்த நிலையில் டோங்கோ எரிமலை வெடிப்பு நூற்றுக்கணக்கான ஹிரோஷிமாக்களுக்கு சமமானது என நாசா குண்டை தூக்கி போட்டுள்ளது. டோங்கோ தலைநகர் நுகுஅலோபாவிற்கு வடக்கே எரிமலை தீவை அழித்துவிட்டது என்று நாசா கூறியது. எரிமலையின் நச்சு சாம்பல் குடிநீரில் நச்சுத்தன்மையை உண்டாக்கியது, பயிர்களை நாசமாக்கியது என கிராமங்களை முற்றிலும் அழித்துவிட்டதாக நாசா தெரிவித்துள்ளது.
எரிமலை வெடிப்பின் தாக்கம்
இது தொடர்பாக நாசா விஞ்ஞானி ஜிம் கார்வின் கூறுகையில், 'எரிமலை வெடிப்பால் வெளியிடப்பட்ட ஆற்றலின் அளவு 5 முதல் 30 மெகாடன்கள் (ஐந்து முதல் 30 மில்லியன் டன்கள்) டிஎன்டிக்கு(TNT சமம் என்று நாங்கள் நினைக்கிறோம். அதாவது ஆகஸ்ட் 1945-அம ஆண்டு ஜப்பானிய நகரமான ஹிரோஷிமா மீது அமெரிக்க அணுகுண்டு வீசியதை விட இந்த எரிமலை வெடிப்பு நூற்றுக்கணக்கான மடங்கு வலிமையானது. ஏனெனில் ஹிரோஷிமா குண்டு வெடிப்பின் தாக்கம் 15 கிலோடன்கள் (15,000 டன்கள்) டிஎன்டிதான் என்று ஜிம் கார்வின் கூறினார்.
Recommended Video
ஹிரோஷிமா குண்டுவெடிப்பை மறக்க முடியுமா?
இரண்டாம் உலகப் போர் முடியும் கட்டத்தில் 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா அதி பயங்கர அணு குண்டுகளை வீசியது. இந்த குண்டுவீச்சில் ஹிரோஷிமாவில் வாழ்ந்த 1,40,000 பேரும், நாகசாகியில் குறைந்தது 74 ஆயிரம் பேரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பு கதிர்வீச்சின் தாக்கம் பல ஆண்டுகளுக்கு பிறகும் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரத்தில் உணரப்பட்டது. குண்டு வெடிப்பு கதிர்வீச்சின் தாக்கம் காரணமாக பல்வேறு வகையிலான புற்றுநோய்களால் ஏராளமானோர் இறந்தனர். பல ஆண்டுகளை கடந்த பிறகும் அங்கு உடல் குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறந்து வருவதாக கூறப்படுகிறது.