அதிகரிக்கும் பாதிப்பு.. அமெரிக்காவில் ஒரே நாளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா நோய் தொற்று அதிகரித்தபடி உள்ளது. புதிதாக 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தகவல்படி, அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்தைக் கடந்துள்ளது. புதிதாக 1 லட்சத்து 5 ஆயிரத்து 294 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 460 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அந்நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 40 ஆயிரத்து 108 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 9 ஆயிரத்து 910 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்க தடுப்பூசி நிலவரம்
வியாழக்கிழமை, அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சிடிசி) வெளியிட்ட தகவல்படி, 216,012,495 பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் கோவிட் -19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். இது முழு அமெரிக்க மக்கள்தொகையில் 65.1 சதவிகிதம் ஆகும். முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் 186,385,751 ஆக இருந்தனர், மொத்தத்தில் இது 56.1 சதவிகிதம் ஆகும். 2 தடுப்பூசிகளை போட்ட பிறகு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை 6,372,007 ஆகும். இது 3.4 சதவீதம்.

குழந்தைகளுக்கு தடுப்பூசி
இதனிடையே, 5 முதல் 11 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான கோவிட் -19 தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (எஃப்.டி.ஏ) அவசர பயன்பாட்டு அங்கீகாரத்தை (EUA) கோரியுள்ளதாக பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் எச்சரிக்கை
கொரோனா வைரஸின் மூன்றாவது அலை அச்சுறுத்தலுக்கு மத்தியில், பண்டிகை மற்றும் திருமண காலங்களில் மக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டும் என்று, இந்தியாவில் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தசரா, தீபாவளி, துர்கா பூஜை, மிலாது நபி போன்ற பண்டிகைகளின் போது கொரோனா பரவும் அபாயம் உள்ளது என்று எச்சரித்துள்ளார் சுகாதாரத் துறை அமைச்சக இணைச் செயலாளர் லாவ் அகர்வால்.

கூட்டம் போட வேண்டாம்
அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்கள் கிறிஸ்துமஸ் மற்றும் திருமண நிகழ்ச்சிகளின்போது கொரோனா பரவ விடாமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தற்போதைய நிலைமையை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. கொரோனா பரவுவதை தவிர்க்க மக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டும் என்று கூறஇய அவர், தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும், நாடு முழுவதும் 20,000த்திற்கும் மேற்பட்ட கேஸ்கள் பதிவாகியுள்ளதால் தொற்றுநோயின் இரண்டாவது அலை முடிவடையவில்லை என்று அரசு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications