அமெரிக்கா அதிபர் டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம் - வன்முறையை தூண்டுவதாக விளக்கம்
அமெரிக்க அதிபர் டிரம்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்: டொனால்டு டிரம்ப் ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிறுவனம் நிரந்தரமாக முடக்கியுள்ளது. வன்முறையை தூண்டும் விதத்தில் கருத்துகளை வெளியிட்டதால் டிரம்ப் கணக்கை நிரந்தரமாக நீக்குவதாக ட்விட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். அவரின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்ற போது மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது.
பாதுகாப்பு படையினருக்கும் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நிலைமையை கட்டுப்படுத்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
உலக தலைவர்கள் கண்டனம்
டிரம்பின் ஆதரவாளர்கள் நிகழ்த்திய இந்த கலவரம் உலக அரங்கில் அமெரிக்காவிற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. தோல்வியை ஒத்துக்கொள்ளாமல் கலவரத்தை தூண்டுவதா என்று உலக தலைவர்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.
டிரம்ப் ட்வீட்டுகள்
நாடாளுமன்ற முற்றுகை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தனது ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பேசிய டிரம்ப், தான் பேசிய வீடியோக்களை ட்விட்டரில் பதிவேற்றம் செய்தார். இதனால், அவை சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில், வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி, அந்த வீடியோக்களை ட்விட்டர் நிறுவனம் தங்கள் பக்கங்களில் இருந்து உடனடியாக நீக்கியது.
ட்விட்டர் எச்சரிக்கை
விதிகளை மீறியதற்காக அதிபர் டிரம்பின் @realDonaldTrump பக்கத்தை ட்விட்டர் நிறுவனம் தற்காலிகமாக முடக்கியது. டிரம்ப் தொடர்ந்து வன்முறை மற்றும் தேர்தல் தொடர்பான தவறான தகவல்களை பரப்பினால் அவரின் ட்விட்டர் பக்கம் நிரந்தரமாக நீக்கப்படும் என ட்விட்டர் நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது.
குமுறிய ட்ரம்ப்
இதனையடுத்து அதிபர் டிரம்ப் டுவிட்டர் நிறுவனம் பேச்சு சுதந்திரத்தை தடை செய்வதாகவும், தன்னை பேசாமல் அமைதியாக இருக்கச் செய்வதற்காக தனது கணக்கை நீக்கியிருப்பதாகவும் குற்றம்சாட்டினார். ட்விட்டர் ஊழியர்கள் ஜனநாயக கட்சி மற்றும் தீவிர இடதுசாரிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் கூறினார்.
டிரம்ப் கொதிப்பு
கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யும் வகையில், எதிர்காலத்தில் சொந்த தளத்தை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் டிரம்ப் கூறினார். பின்னர், சில நிமிடங்களில் அந்த ட்வீட்டுகள் நீக்கப்பட்டன.
உலக வரலாற்றில் முதன் முறையாக
இந்த நிலையில் டொனால்டு டிரம்ப் ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிறுவனம் நிரந்தரமாக முடக்கியுள்ளது. வன்முறையை தூண்டும் விதத்தில் கருத்துகளை வெளியிட்டதால் டிரம்ப் கணக்கை நிரந்தரமாக நீக்குவதாக ட்விட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அமெரிக்க அதிபரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது உலக வரலாற்றில் இதுவே முதன்முறையாகும்.