ஆப்கனில் மீண்டும் ஆயுதத்தை கையில் எடுத்த அமெரிக்கா.. தீவிரவாதிகள் மீது சரமாரி குண்டு வீச்சு.. பதிலடி
வாஷிங்டன்: தற்கொலை படை தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் டிரோன் மூலம் குண்டு வீசி பதிலடி தாக்குதலை தொடங்கியிருக்கின்றன.
Recommended Video
கடந்த 20 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் நிலை நிறுத்தப்பட்டிருந்தது. நேட்டோ படைகள் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தனர்.
இதனால் ஆப்கானிஸ்தானில் ஜனநாயக அரசு நடைபெற்று வந்தது. ஆனால் அமெரிக்க படைகள் மீண்டும் தாயகம் திரும்பும் என்று அதிபர் ஜோ பைடன் அறிவித்த பிறகு தாலிபான்கள் எழுச்சி ஆரம்பித்தது.
நடு இரவில் எமர்ஜென்சி அறைக்கு சென்ற பிடன்.. காபூலில் நடந்தது தொடக்கம்தான்.. எச்சரிக்கும் அமெரிக்கா!
ஆப்கனில் தாலிபான்கள்
ஆப்கானிஸ்தான் ராணுவம் பலவீனமாக இருந்த நிலையில், ஆப்கானிஸ்தான் நாடு முழுவதையும் தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். அமெரிக்கா வழங்கிய அதி நவீன ஆயுதங்களும் தாலிபான்கள் கைக்கு சென்றுள்ளன. இந்த நிலையில்தான் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதிக்குள் அமெரிக்க ராணுவம் அவர்கள் நாட்டுக்கு திரும்பிச் செல்லவேண்டும் என்று தலிபான்கள் கெடு விதித்தனர்.
மக்கள் வெளியேற்றம்
அதே நேரம், தங்கள் நாட்டு மக்களையும் பிற நாட்டு மக்களையும் காபூல் விமான நிலையம் வழியாக அமெரிக்க ராணுவம் அவரவர் நாடுகளுக்கு அனுப்பி வைத்துக்கொண்டிருக்கிறது. இந்த பணிகளுக்காக சுமார் 6 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் காபூல் விமான நிலையத்தில் முகாமிட்டுள்ளனர்.
அமெரிக்க ராணுவ வீரர்கள்
இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் இரவு, காபூல் விமான நிலையம் அருகே 2 இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது இதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 13 பேர் உட்பட 170க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அவசர ஆலோசனை நடத்திய அமெரிக்க அதிபராக ஜோ பைடன் இந்த தாக்குதலை, நாங்கள் மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம். தாக்குதலில் ஈடுபட்டவர்களை வேட்டையாடுவோம் என்று சூளுரைத்தார் .
ஆட்டத்தை ஆரம்பித்த அமெரிக்கா
அதிபர் எச்சரிக்கை பிறப்பித்து அடுத்த 24 மணி நேரத்தில் அமெரிக்கா தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. ஆளில்லா ட்ரோன் விமானங்கள் மூலமாக, ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பினர் பதுங்கி உள்ள இடங்களில் சரமாரியாக அமெரிக்கா குண்டு வீசத் தொடங்கியிருக்கிறது. இந்த அமைப்புதான் காபூல் தாக்குதலுக்கு காரணம் என்பதால், அவர்களை வேரறுக்க அமெரிக்கா களம் கண்டுள்ளது.
ட்ரோன் தாக்குதல்
ஆப்கானிஸ்தானின் நன்கர்கர் மாகாணத்தில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதை உளவுத்துறை மூலம் அறிந்து கொண்டு, சரியாக அந்த இடத்தைக் குறிவைத்து தாக்கி வருகிறது அமெரிக்கா. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அமெரிக்கா ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டிருந்த நிலையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் மீண்டும் அமெரிக்காவை ஆயுதத்தை கையில் எடுக்க வைத்து விட்டது.
அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு
அமெரிக்க தாக்குதலில் எந்தமாதிரி சேதங்கள் ஏற்பட்டன என்ற விவரம் இப்போதைக்கு உடனடியாக தெரியவில்லை. இருப்பினும் தீவிரவாதிகளின் முக்கிய தலைவர்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலை தொடர்ந்து காபூல் ஏர்போர்ட் வளாகத்திலிருந்து அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று, அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
இலக்கு வீழ்ந்தது
"ஆளில்லா விமானத் தாக்குதல் ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் நடத்தப்பட்டது. ஆரம்பக் கட்ட தகல்கள்படி நாங்கள் இலக்கை (சதித்திட்டம் தீட்டியவர்) கொன்று வீழ்த்தி விட்டோம்" என்று மத்திய கமாண்டர் கேப்டன் பில் அர்பன் தெரிவித்துள்ளார். அதேநேரம், இந்த தாக்குதலில் "பொதுமக்கள் யாருக்கும் உயிரிழப்பு ஏற்டவில்லை" என்றும் கேப்டன் பில் அர்பன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை பிற்பகல் பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி அளித்த பேட்டியில், ஐஎஸ்ஐஎஸ் குழு மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்தார். தப்பிச் செல்பவர்களை தடுத்து நிறுத்த ஏர்போர்ட் அருகே தாக்குதல்கள் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். எனவே முன்னெச்சரிக்கை அடிப்படையிலும், அமெரிக்கா இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.