ச்சீ! விலைவாசி உயர்வு பற்றி கேட்ட ரிப்போர்டர்- கேட்க முடியாத வார்த்தையில் திட்டிய பைடன்! பரபர வீடியோ
வாஷிங்டன்: அமெரிக்காவில் வரலாறு காணாத அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரை அதிபர் பைடன் அசிங்கமாகத் திட்டும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக உலகின் அனைத்து நாடுகளும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வல்லரசு நாடுகள் தொடங்கி வளரும் நாடுகள், பின்தங்கிய நாடுகள் என அனைத்தும் வைரஸ் பாதிப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் ஒருபுறம் என்றால் இதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பும் மிக மோசமாகவே உள்ளது. இதைச் சமாளிக்க உலக நாடுகள் கடுமையாகப் போராடி வருகின்றன.
40 கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்ட ரவுடி படப்பை குணா கோர்ட்டில் திடீர் சரண்!
விலைவாசி உயர்வு
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அலைகள் உலக நாடுகளைப் பொருளாதார ரீதியாக முடக்கிப் போட்டது. இதனால் பல நாடுகளும் ஊரடங்கை அறிவித்தன. இதன் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நிதி நெருக்கடியைச் சமாளிக்க உலக நாடுகள் அதிகளவில் பணத்தை அச்சடிக்கத் தொடங்கின. இதனால் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் கடந்த 39 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமாக உயர்ந்துள்ளது.
செய்தியாளர் கேள்வி
இந்தச் சூழலில் விலைவாசி உயர்வு குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரை அமெரிக்க அதிபர் பைடன் அசிங்கமாகக் கேட்க முடியாத கெட்ட வார்த்தையில் திட்டும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை மாளிகையில் நேற்று திங்கள்கிழமை அதிபர் பைடன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்கள் கிளம்பும் போது, ஃபாக்ஸ் நிறுவனத்தின் செய்தியாளர் பீட்டர் டூசி வரலாறு காணாத விலைவாசி உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார்.
அசிங்கமாகத் திட்டிய பைடன்
அப்போது மைக் ஆனில் இருப்பது தெரியாமல் அதிபர் பைடன், கெட்ட வார்த்தைகளால் செய்தியாளர் பீட்டர் டூசிவை திட்டினார். அதிபர் திட்டியது அங்கிருந்த செய்தியாளர்களுக்குச் சரியாகக் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்போது செய்தியாளர்கள் எதுவும் கூறவில்லை. இருப்பினும், இந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விலைவாசி உயர்வு குறித்த கேள்விக்கு நேரடியாகப் பதில் தராமல் அதிபர் பைடன், செய்தியாளரையே கெட்ட வார்த்தையில் திட்டிய இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மன்னிப்பு
இந்தச் சம்பவத்திற்கு முதலில் யாரும் மறுப்போ அல்லது விளக்கமோ தெரிவிக்கவில்லை. இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையான நிலையில், அதன் பின்னர் அதிபர் பைடன் சம்பந்தப்பட்ட செய்தியாளருக்கு ஃபோன் செய்து அவரிடம் மன்னிப்பு கோரியதாகக் கூறப்பட்டுள்ளது. அதிபர் பைடன் செய்தியாளர் சந்திப்பில் இதுபோல லூஸ் டாக் விடுவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே கடந்த மாதமும் இதேபோல செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் - பைடன்
இதற்கு முன்பு அதிபராக இருந்த குடியரசு கட்சியின் டிரம்ப் தான் செய்தியாளர் சந்திப்பின் போது அவர்களுடன் சண்டை போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வெள்ளை மாளிகை தொடங்கி எங்குச் செய்தியாளர் சந்திப்பு நடந்தாலும் சி.என்.என் உள்ளிட்ட செய்தியாளர்களுடன் டிரம்ப் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார். இப்போது பைடனும் அதேபோல செய்தியாளரைத் திட்டியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
குறையும் ஆதரவு
கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் வென்று அமெரிக்காவின் 46ஆவது அதிபராகப் பொறுப்பேற்ற பைடனின் மக்கள் ஆதரவு அதன் பின்னர் தொடர்ந்து குறைந்தே வருகிறது. சமீப்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் கூட வெறும் 39% அமெரிக்க வாக்காளர்கள் மட்டுமே அதிபர் பைடனின் செயல்பாடுகளுக்கு ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவல் மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக பைடனின் மக்கள் ஆதரவு குறைந்துள்ளது.