ரஷ்யாவுடன் ஏன் நேருக்கு நேர் மோதல் இல்லை.. ஓஹோ, இதுதான் காரணமா? ஜோ பைடன் கொடுக்கும் புது விளக்கம்
வாஷிங்டன் : உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிராக நேருக்கு நேர் போரிடாது எனவும், மூன்றாம் உலகப் போரை தவிர்க்கவே ரஷ்யாவுடன் நேட்டோ படைகள் நேரடியாக மோதவில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா இன்று 14-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷியா தொடர்ந்து தலைநகரை கைப்பற்றும் திட்டத்துடன் தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைனில் உள்ள மிகப்பெரிய அணு உலையான செர்னோபில்லையும் ரஷியா கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் அங்கு போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

ஜெலன்ஸ்கி கோரிக்கை
இந்நிலையில் உக்ரைன் நாட்டின் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் எனவும், ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் மக்கள் தொடர்ந்து போராட வேண்டும் என உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் காணொலி மூலம் பேசிய ஜெலன்ஸ்கி, ரஷியாவுக்கு எதிரான பொருளாதார தடைகளின் அழுத்தத்தை அதிகரித்து அந்நாட்டை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

விமானங்கள் பறக்க தடை
உக்ரைனிய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மேலும் ரஷ்ய படைகளை ஆகாயம், கடல், தரை என மூன்று வழிகளிலும் உக்ரைன் ராணுவம் எதிர்கொண்டு வருவதாக கூறிய ஜெலென்ஸ்கி, தங்கள் வான்பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதி என அறிவித்து, உக்ரைன் வான்பரப்பு பாதுகாப்பானது என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

ஜோ பைடன் விளக்கம்
இந்நிலையில் ஆரம்பகட்டத்தில் உக்ரைனுக்கு மிக்க ஆதரவளித்து வந்த அமெரிக்கா நேரடியாக ரஷ்யாவுடன் போர் புரியாமல், ஆயுதம் மற்றும் நிதி உதவியை மட்டும் அளித்து வருகிறது. மேலும் நேட்டோ படைகளும் உக்ரைனுக்கு ஆதரவாக களம் இறங்கவில்லை. நேட்டோ மற்றும் உலக நாடுகள் உக்ரைனை கைவிட்டு விட்டதாக அதிபர் ஜெலன்ஸ்கி புலம்பிய நிலையில் அதற்கான காரணம் என்ன என்பது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகையில் பேசிய அவர், புது விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.

3ஆம் உலகப் போருக்கு வாய்ப்பு
3ஆம் உலகப் போரை தவிர்க்கவே ரஷ்யாவுடன் நேட்டோ படைகள் நேரடியாக மோதவில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைன் விவகாரத்தில் ஐரோப்பாவில் உள்ள தங்கள் கூட்டணி நாடுகளுக்கு தொடர்ந்து ஆதரவாக இருக்கப்போவதாக தெரிவித்தார். நேட்டோ நாடுகளுக்குள் பிரிவினை ஏற்படுத்தும் முயற்சியில் ரஷ்ய அதிபர் புடின் தோற்று விட்டதாகவும் பைடன் கூறினார்.

ரஷ்யாவுக்கு எச்சரிக்கை
மேலும், உக்ரைனை ரஷ்யா ஒருபோதும் வெற்றிகொள்ள முடியாது என்றும், உக்ரைனுக்கு அமெரிக்காவும் பிற உலக நாடுகளும் ஆதரவாக இருப்பதாகவும் பைடன் பேசினார். ரஷ்யா ஏற்கனவே மோசமான வகையில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் புடின் தொடர்ந்து போர் நடத்திக்கொண்டிருந்தால் மேலும் பல பொருளாதார தடைகள் அந்நாடு மீது விதிக்கப்படும் என்றும் பைடன் எச்சரித்தார். உக்ரைன் மீது ரஷ்ய படைகள் ஒருவேளை ரசாயன ஆயுதங்கள் பிரயோகித்தால் அதற்கு அந்நாடு மிகப்பெரிய விலையை கொடுக்கவேண்டி வரும் என்றும் அமெரிக்க அதிபர் பைடன் எச்சரித்தார்.












Click it and Unblock the Notifications